அரசியல் என்ற பெயரில் ராட்சஸ செயல்களில் ஈடுபடும் ராமதாஸ்- ரஜினிகாந்த்
டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாக திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட்சஸ செயல்களிலும், அராஜகங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாசை என்னுடைய தனிப்பட்ட பாதிப்பிற்காக நான் எதிர்க்கவில்லை. இந்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எதிர்க்கிறேன். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதினால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்.
நான் ஆன்மிகவாதி, எனக்கெதற்கு இந்த பழிவாங்கும் உணர்ச்சி? என்று சிலர் கேட்கிறார்கள். நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தை காட்டும் அளவிற்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரி ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை.
அந்த தவறை ஆயிரம் முறை செய்வேன்: நான் ஒரு தப்பும் செய்யாமல் என்னை அடிப்பவரை நான் அடிப்பது தவறு என்று சொன்னால், அந்த தவறை நான் ஆயிரம் முறை செய்வேன்.
என்னை வாழ வைத்த ரசிகப் பெருமக்களே உங்க பலம் என்னவென்று டாக்டர் ராமதாசுக்கு புரிய வைத்து விட்டீர்கள், போதும், இனிமேல் கறுப்புக் கொடி காட்டுவதோ, அவர் பேசும்போது கூச்சல் போடுவதோ, சுவரொட்டிகளை ஒட்டுவதோ வேண்டாம். ஜனநாயக ரீதியில் இனி ஓட்டுப் போடுவதில் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். இதையும் மீறி டாக்டர் ராமதாஸ் கட்சியினர் ஜெயித்தால் அது டாக்டர் ராமதாஸ் அவர்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம்,
தோற்றால் அவர் செய்த பூர்வஜென்ம புண்ணியமெல்லாம் தீர்ந்து போச்சுன்னு அர்த்தம். அவர்கள் ஜெயித்தால் நாம் தோற்று விட்டோமென்று அர்த்தமில்லை. அவர்கள் தோற்றுவிட்டால் நாம் ஜெயித்து விட்டோம் என்று அர்த்தமில்லை. அநியாயமாக எங்களை எதிர்த்தவர்களுக்கு நியாயமாக எங்கள் எதிர்ப்பை காட்டி விட்டோம்.