தூத்துக்குடி: வெள்ளத்தில் இடிந்த 100 வீடுகள்... கலெக்டரை மீட்க வந்த கடலோர காவல்படை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் அந்தோனியார்புரத்தில் கனமழை வெள்ளத்தால் 70 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆனது. இம்மாவட்டத்தில் மட்டும் இதுவாரை பெய்த கனமழைக்கு 110 வீடுகள் இடிந்துள்ளன. அந்தோனியார்புரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மேலும் 573 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர் மழையால், தூத்துக்குடி மாநகரை ஒட்டியுள்ள ராஜீவ்நகர், மறவன்மடம், கோரம்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. திடீரென பெருக்கெடுத்த வெள்ளத்தால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், வெளியில் வர முடியாமல் தவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டு மண்டபங்களில் தங்க வைத்தனர்.
மிதக்கும் ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தண்ணீரில் மிதப்பதால், இரவு பணிக்கு சென்ற பணியாளர்கள், வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை கடலோர காவல் படையினர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர். இதேபோன்று காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு ஊழியர் குடியிருப்பு மற்றும் பலர் தனியார் குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
தீவான தூத்துக்குடி
சாலைகளை மூழ்கடித்த தண்ணீரால், தூத்துக்குடி, நெல்லை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொக்லைன் மூலம் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டது. தூத்துக்குடி-நெல்லை இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதை அடுத்து, பேருந்துகள் செய்துங்கநல்லூர், ஏரல் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
போக்குவரத்து துண்டிப்பு
இதேபோன்று செக்காரக்குடி, பேரூரணி, மங்களகிரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் குளத்திலிருந்து, 24 கண் மதகு வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மக்கள் வெளியேறுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த வீடுகள்
தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தால் கோரம்பள்ளம், அந்தோணியார்புரம், முள்ளக்காடு பகுதிகளில் உள்ள 150க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த பகுதிகளுக்குள் அதிகாரிகள் சென்று சேதத்தை மதிப்பிட முடியாதபடி வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதே போன்று முள்ளக்காடு, அந்தோணியார்புரம், மறவன்மடம் பகுதிகளில் 300 வீடுகள் இடிந்துள்ளன. இவை தவிர சுமார் 1000 வீடுகள் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளன. வெள்ளம் வடிந்த பின்னர் சேதம் அடைந்த வீடுகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுக்க உள்ளனர்.
சாலைமறியல்
இந்த நிலையில் இன்று காலை கோரம்பள்ளம் தோரிஸ்புரம் பகுதியில் 70 வீடுகள் இடிந்து விழுந்தன. இப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் வெள்ள நிவாரண பணிகள் சரியாக நடக்கவில்லை என்றும், அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை என்றும் அவர்கள் புகார் கூறியுள்ளனர். இந்த சாலை மறியலால் தூத்துக்குடி- நெல்லை இடையே 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.