வெள்ளத்தால் சூழப்பட்டு திக்குமுக்காடும் தூத்துக்குடி.. எங்கு பார்ததாலும் தண்ணீர் தண்ணீர்!
துத்துக்குடி: தூத்துக்குடி நகரமே கடலுக்குள் போய் விட்ட தனித் தீவு போல காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழப்பட்டுள்ளது. மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி வட்டாரப் பகுதிகள் முழுவதும் மழை நீர் நிரம்பி உள்ளது.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, தனசேகர் நகர், முத்தம்மாள் காலனி, திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம், அத்திமரப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வடியாத வெள்ளம்
தனசேகர் நகர், முத்தம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு படையினர் முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் வெள்ளம் அதிகளவில் இருந்ததால் அவர்கள் உள்ளே செல்ல முடியவில்லை.
துண்டிக்கப்பட்ட போக்குவரத்து
நெல்லை- தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதே போல் தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலையிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் இருந்து பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு அட்டூழியம்
அந்தோணியார்புரம் பகுதியில் உள்ள பழைய டோல்கேட் அருகே சுமார் 10 அடி உயரத்திற்கு கட்டிடங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. உப்பாற்று ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் வெள்ளநீர் முழுமையாக கடலுக்குள் செல்ல முடியவில்லை. இதனால் மழை வெள்ளம் ஊருக்குள் புக தொடங்கியுள்ளது. விடிய விடிய பெய்த மழையால் மேலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.
மக்கள் மீட்பு
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையிலிருந்து மீட்புப் படையினர்
நெல்லையில் இருந்து ஏராளமான தீயணைப்பு படையினர் மீட்பு பணிக்காக தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். ரப்பர் படகுகள் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெள்ளத்தில் மூழ்கிய கலெக்டர் அலுவலகம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் அதிக அளவு வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள அரசு அலுவலர் குடியிருப்பு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய பகுதிகள் தண்ணீரில் மிதக்கிறது. இதே போல் அருகில் உள்ள ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புக்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்துள்ளது.
மொட்டை மாடிகளில் தஞ்சம்
தூத்துக்குடி வட்டாரப் பகுதிகள் முழுவதிலும் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
படங்கள்: வீ.எஸ்.மணியன்