துப்பாக்கிச் சூடு: மனு வாங்க மறுப்பு- தலைமை செயலகத்தில் பாரதிராஜா உட்பட 50 பேர் உள்ளிருப்பு தர்ணா!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து மனு கொடுக்க வந்த பாரதிராஜா உள்ளிட்டோர், தலைமை செயலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி மனு கொடுக்க வந்த திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்க திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தலைமைச் செயலகக்துக்கு மாலையில் வந்தனர்.
ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதையடுத்து, தலைமை செயலக வளாகத்தில் பாரதிராஜா, அமீர், திருமுருகன் காந்தி உள்பட 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுடைய மனுவை வாங்குவதற்கு கூட தலைமைச் செயலர் வரவில்லை என்று அமீர் கூறியுள்ளார்.