ஜெயலலிதாவை கீழ்த்தரமாக விமர்சித்து கார்ட்டூன் போட்ட இலங்கை.... 2014ன் பரபரப்பு பிளாஷ்பேக்!
சென்னை: இதுவும் கடந்து போகும்.. அதேபோல இந்த 2014ம் வருடமும் முடிவுக்கு வருகிறது. வருடா வருடம் நடப்பதைப் போலவே இந்த வருடமும் இந்தியாவை உலுக்கிய விவகாரங்கள், வில்லங்கங்கள், பரபரப்புகள் அதிகம்தான்.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுமைக்குமே இந்த வருடம் பரபரப்பான ஒரு வருடமாகவே இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை.
அரசியல், விளையாட்டு, வர்த்தகம், பொழுதுபோக்கு என சமூகத்தின் அத்தனை பிரிவிலுமே பிரளயங்களைச் சந்தித்தது 2014ம் வருடம்.
இந்தியாவில் அரசியல் ரீதியாக லோக்சபா தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. அப்படி பிரளயம் ஏற்படுத்திய சிலவற்றை ரீவைண்ட் செய்து பார்ப்போம்...
கெஜ்ரிவால் போராட்டம்
டெல்லி சட்டசபைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் 2வது இடத்தைப் பிடித்து நாட்டையே அதிசயிக்க வைத்து பின்னர் ஆட்சியையும் அமைத்து அசத்திய அரவிந்த் கெஜ்ரிவால் தடாலடியாக தான் ஒரு முதல்வர் என்பதையும் மறந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு டெல்லி மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்திய ஆண்டு 2014. டெல்லி காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் நடத்திய போராட்டம் மக்களைக் கவரவில்லை. மாறாக எரிச்சலையே ஏற்படுத்தியது. இதனால் தனது போராட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்ட கெஜ்ரிவால், பின்னர் திடீரென தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஆட்சியும் போனது. அத்தோடு கெஜ்ரிவாலின் சகாப்தமும் முடிவுக்கு வந்தது. இன்று பத்தோடு பதினொன்று என்ற நிலையில்தான் கெஜ்ரிவால் இருக்கிறார்.
சுனந்தாவின் மர்ம மரணம்
சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் திடீரென மர்மமான முறையில் டெல்லி ஹோட்டலில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. சசி தரூருக்கும், பாகிஸ்தான் பெண் செய்தியாளர் மெஹர் தராருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக எழுந்த சர்ச்சை, அதன் பின்னர் சுனந்தாவுக்கும், மெஹருக்கும் இடையே டிவிட்டரில் நடந்த வாய்ச்சண்டை ஆகியவற்றின் பின்னணியில் சுனந்தாவின் மரணம் வந்து சேர்ந்தது. இன்று வரை சுனந்தா இறந்தது எப்படி என்பது தெளிவாகவில்லை. 2014ம் ஆண்டின் பரபரப்பான ஒரு சம்பவம் சுனந்தாவின் மரணம்.
இவர்தான் என் மனைவி!
பிரதமர் நரேந்திர மோடிக்குத் திருமணமாகி விட்டதா, இல்லையா என்பதே பல காலமாக மர்மமாக இருந்த நிலையில் இந்த ஆண்டில்தான் தான் திருமணமானவன், தனது மனைவி பெயர் யசோதா பென் என்பதை முதல் முறையாக பகிரங்கப்படுத்தினார் மோடி. லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது தனது வேட்பு மனுவில் தனது மனைவி யசோதா பென் என்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் மோடியின் மனைவி குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. அதேசமயம், தேர்தலில் போட்டியிடுவதற்காகவே தனது மனைவி யார் என்பதை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
லவ் ஜிஹாத்
2014ம் ஆண்டில் வட இந்தியாவில் பரபரப்பைக் கிளப்பிய ஒரு வார்த்தை இந்த லவ் ஜிஹாத். அதாவது டாக்டர் ராமதாஸ் வார்த்தையில் சொல்வது என்றால் காதல் திருமண நாடகங்கள். இந்த லவ் ஜிஹாத் என்ற வார்த்தையே இந்த வருடம் புதிதாக பிறந்த ஒன்றுதான்.
சில இந்து மத அமைப்புகள் உருவாக்கிய வார்த்தைதான் இந்த லவ் ஜிஹாத். இளம் முஸ்லீம் ஆண்கள், முஸ்லீம் அல்லாத இளம் பெண்களை வலை வீசி காதலித்து பின்னர் அவர்களை மதம் மாற்றுவதாக கிளப்பி விட்டனர் சில இந்து மத அமைப்பினர். இதனால் வட இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சாதித் தீயில் கருகிப் போய்க் கிடக்கும் உ.பி., பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இது சூட்டைக் கிளப்பி விட்டு விட்டது.
அதிலும், பாஜகவைச் சேர்ந்த எம்.பியான சாமியார் யோகி ஆதித்யாநாத், அவர்கள் ஒரு இந்துப் பெண்ணை எடுத்துச் சென்றால் நாம் 100 முஸ்லீம் பெண்களைத் தூக்குவோம் என்று பகிரங்கமாக மிரட்டிப் பேசியபோது மேலும் பரபரப்பானது வட இந்தியா.
புர்த்வான் குண்டுவெடிப்பு
அக்டோபர் 2ம் தேதி மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் நகரில் செயல்பட்டு வந்த ரகசிய குண்டு தயாரிப்பு ஆலையில் நடந்த திடீர் குண்டுவெடிப்பில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத் இ பங்களாதேஷ் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வங்கதேச தீவிரவாதிகள் இந்தியாவில் களம் அமைத்து மிகப் பயங்கரமான சதித் திட்டத்துடன் செயல்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தியாவிலும் வங்கதேசத்திலும் இந்த அமைப்பு எந்த அளவுக்கு மிகப் பெரிய திட்டத்துடன் செயல்பட்டு வந்தது என்ற தகவல்களும் வெளியாகி நாட்டைப் பரபரப்பில் ஆழ்த்தியது.
ஜெயலலிதாவைக் கிண்டல் அடித்துப் படம் போட்ட இலங்கை
ராஜபக்சே தம்பி கோத்தபயா ராஜபக்சே தலைமையில் இயங்கி வரும் இலங்கை பாதுகாப்புத்துறையின் இணையதளம், முதல்வராக இருந்த ஜெயலலிதாவையும், பிரதமர் நரேநத்ரி மோடியையும் இணைத்து வெளியிட்ட கார்ட்டூன் படம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆகஸ்ட் மாதம் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் கார்ட்டூன் படத்தில் பிரதமர் மோடிக்கு, முதல்வராக இருந்த ஜெயலலிதா காதல் கடிதங்களை அனுப்புவது போல சித்தரித்து கீழ்த்தரமாக நடந்து கொண்டிருந்தனர் இலங்கைப் பாதுகாப்புப் படையினர்.
இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் இந்த செயலைக் கண்டித்திருந்தன. இதையடுத்து அடுத்த நாளே அந்தப் படத்தை நீக்கிய இலங்கைப் பாதுகாப்புத் துறை, மன்னிப்பும் கேட்டு செய்தி வெளியிட்டது.
மதுக் கடைகளை இழுத்து மூடிய கேரளா
ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஒரு புரட்சி நடந்தது. அதாவது 400க்கும் மேற்பட்ட மது பார்களை இழுத்து மூட கேரள முதல்வர் உம்மன் சாண்டி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் கேரளாவை முழுமையான மது விலக்கு மாநிலமாக மாற்றப் போவதாகவும் அவர் அறிவித்தது நாட்டையே கேரளாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. குடி அடிமைகள் அதிகம் உள்ள முன்னணி மாநிலமான கேரளாவை குடியே இல்லாத மாநிலமாக மாற்றப் போவதாக உம்மன் சாண்டி அறிவித்து, நடவடிக்கையிலும் இறங்கியது நாட்டையே ஆச்சரியப்படுத்தியது.
மத்திய அரசின் சமஸ்கிருதத் திணிப்பு
மோடி தலைமையிலான மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பும் இந்த ஆண்டில்தான் வேகம் பிடித்தது. கடந்த நவம்பர் மாதம் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப் பாடத்திற்குப் பதில் சமஸ்கிருதத்தை சேர்க்க உத்தரவிட்டது அனைவரையும் அதிரச் செய்தது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் ஜெர்மன் மொழியை நீக்கி விட்டு சமஸ்கிருதத்தை சேர்க்க அவர் உத்தரவிட்டார். இதனால் மாணவ, மாணவியரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். நாடுமுழுவதும் இதற்கு எதிர்ப்பு எழுந்தது.
பிரியங்கா காந்தி போட்டோவை உற்றுப் பார்த்த எம்.எல்.ஏ.
கர்நாடக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ பிரபு சவான் என்பவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் புகைப்படத்தை தனது செல்போனில் ஆபாசப் பார்வையுடன் பார்த்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த எம்.எல்.ஏ ஒரு நாள் சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் கர்நாடக சட்டசபையில் செல்போன்களைப் பயன்படுத்தவும் சபாநாயகர் தடை விதித்தார்.
சச்சின் சுயசரிதை
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எழுசிய சுயசரிதை நூல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் கேப்டனும், இந்தியாவுக்கு முதல் முறையாக உலக்க கோப்பையை வென்று தந்தவருமான கபில்தேவ் குறித்து அவர் எழுதிய சில சர்ச்சை வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் குறித்த அவரது கருத்துக்களும் சலசலப்பை ஏற்படுத்தின. தான் உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு ஜட்டிக்குள் பேப்பரை வைத்து ஆடியது குறித்த சுவாரஸ்யமும் அதில் இடம் பெற்றிருந்தது.
2014ம் ஆண்டின் பரபரப்புகளை சுருக்கமாக பட்டியலிடவே முடியாது. காரணம், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது இந்த ஆண்டில். மோடியில் ஆரம்பித்து ஜெயலலிதா கைது பின்னர் விடுதலை வரை பரபரப்பான நிகழ்வுகளின் பட்டியல் மிகப் பெரியது... நீண்டது... நெடியது.. 2015ம் ஆண்டு இன்பமான ஆண்டாக மலரட்டும்.
பதான் தலிச் சகோதரிகளின் மர்ம மரணம்
கடந்த மே 27-ம் தேதி, உத்தரப் பிரதேசம், பதான் மாவட்டத்தில் உள்ள கட்ரா சதாத்கஞ்ச் போலீஸ் சரகத்துக்கு உள்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 14, 15 வயதுடைய இரு தலித் சிறுமிகள் காணாமல் போயினர். அடுத்த நாள் உஷைத் பகுதியில் உள்ள மாமரத்தில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்பு, தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் சிபிஐ விசாரணையில், இரு சகோதரிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என சிபிஐ தெரிவித்தது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.