பிளாஷ்பேக் 2017: அரியலூர் நந்தினி முதல் சென்னை ஹாசினி வரை - கொடூரர்களுக்கு இரையான சிறுமிகள்
2017ஆம் ஆண்டில் பச்சிளம் குழந்தைகள், பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் பலர் கொடூரர்களால் பலாத்காரம் செய்து கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை: 2017ஆம் ஆண்டு எத்தனையோ சம்பவங்கள் கடந்துள்ளன. இந்த ஆண்டு பல கொடூரர்களை அடையாளம் காட்டியுள்ளது. பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரை விட்டுள்ளனர்.
அரியலூரில் சிறுமி நந்தினி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள் நந்தினி கொலையை மறக்கடிக்கச் செய்து விட்டது.
செப்டம்பர் மாதம் சிறுமி ஹாசினியின் கொடூர மரணமும் அப்போதய பரபரப்பை ஏற்படுத்தி விட்டு மக்களால் மறக்கடிக்கப்பட்டு விட்டது.
நந்தினி கூட்டு பலாத்காரம்
அரியலூரை அடுத்த செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. தந்தையை இழந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த நந்தினி சித்தாள் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். அப்போது கொத்தனார் வேலை செய்து வந்த இந்து முன்னணியின் ஒன்றிய செயலர் மணிகண்டன், நந்தினியை இடைவிடாமல் துரத்தி காதலித்திருக்கிறார். ஒருகட்டத்தில் நந்தினியும் உடன்பட இருவரும் காதலித்தனர்.
கூட்டு பலாத்காரம் செய்து கொலை
கடந்த ஜனவரி மாதம் பாழடைந்த கிணற்றில் நந்தினி நிர்வாண நிலையில் பிணமாக மிதந்தார். அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ததில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. நந்தினி கொலை வழக்கில் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும் பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தின. அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளில் நந்தினி மறக்கடிக்கப்பட்டாள்.
ஹாசினி எரித்துக்கொலை
போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 5ம் தேதி வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென மாயமானாள். அதே குடியிருப்பில் வசித்து வந்த கொடூரன் தஷ்வந்த், சிறுமி ஹாசினியை கடத்தி சென்று பலாத்காரம் செய்ய முயன்றபோது, ஹாசினி அலறி கூச்சலிட்டதால், கழுத்தை நெரித்து கொலை செய்து தாம்பரம் பைபாஸ் சாலையோரம் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றான்.
சங்கரன்கோவில் சிறுமி
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கன்னி பகுதியை சேர்ந்த 3ஆம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமி தனியாக வீட்டில் இருந்த சமயத்தில் பக்கத்து வீட்டில் வசித்துவரும் திருமணமான வாலிபரான பொய்யாழி என்ற காமுகன் சிறுமி வீட்டுக்குள் புகுந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தான். அவனை போலீசார் கைது செய்தனர்.
ஃபேஸ்புக் நட்பு
கடந்த மே மாதம் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, ஃபேஸ்புக்கில் நண்பராக அறிமுகமான இப்ராஹிம் என்பவருடன் பேசினார். அவனும் சிறுமியுடன் தொடர்ந்து பேசி பழகி வீட்டு தொலைப்பேசி எண்ணை வாங்கி மணிக்கணக்கில் பேசினான். பாண்டிச்சேரிக்கு அழைத்துச்சென்று சீரழித்தான். தப்பி வந்த சிறுமி போலீசில் புகார் அளித்தார்.
சிறுமி தற்கொலை
கோயம்பேடு தனியார் பள்ளி ஒன்றில் தாளாளராக பணியாற்றி வரும் நபர், தனது உறவுக்கார சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி, குடும்ப மானத்தை கருத்தில் கொண்டு இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் சிறுமியை அடிக்கடி தொந்தரவு செய்து பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தவே கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி மே மாதம் வீட்டில் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓடும் பேருந்தில் பலாத்காரம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நாரணம்பாளையத்தில், 15 வயது சிறுமி தனியார் பேருந்தில் சென்றுள்ளார். அந்தப் பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் இறங்கியுள்ளனர். அப்போது, பேருந்தில் தனியாக இருந்த அந்த 15 வயது சிறுமியை மூன்று டிரைவர்கள் சேர்ந்து பேருந்துக்குள் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை அறிந்த ஊர் மக்கள் அந்த மூன்று பேரையும் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். 2017 ஆண்டு பல கொடூரர்களை அடையாளம் காட்டியுள்ளது. ஆனால் அரசியல் நிகழ்வுகளினால் இந்த சம்பவங்கள் மறக்கக்கடிக்கப்படுகின்றன.