பலத்த சூறாவளி.. தொடரும் கடல் கொந்தளிப்பு.. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டிப்பு
பலத்த சூறாவளி காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ராமேஸ்வரம்: பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன், கடலும் கொந்தளிப்பில் காணப்படுவதால் ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தயாரானார்கள். ஆனால் அந்நேரத்தில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகவே கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பலத்த காற்றும் வீசிவருகிறது. கடலலையும் பலஅடி உயரத்துக்கு எழும்பி செல்கிறது.
இதனால் பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை கேட்டுக் கொண்டது. அத்துடன், மீன்பிடிக்க அனுமதிக்கும் டோக்கனையும் மீனவர்களுக்கு வழங்க மறுத்தது. ஆனாலும் சில மீனவர்கள் தடை அறிவிப்பினையும் மீறி 2 நாட்களாக கடலுக்கு சென்று வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று காலையும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்று வீசி வருகிறது. கடலும் அதேபோல் கொந்தளிப்புடன்தான் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான தடையை இன்றும் நீட்டித்துள்ளது மீன்வளத்துறை. மோசமான வானிலை காரணமாக ஒரு வாரமாகவே மீன்பிடிக்க இயலாமலும், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்கள் கடகுகளையெல்லாம் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.