சென்னையில் 2வது நாளாக இன்றும் பனிமூட்டம்... வாகன, விமானப் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னையில் நிலவி வருகின்ற கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் காலைப் பொழுதில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டது.
இதனால் எதிரே செல்லும் வாகனங்கள் சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். காலை 7 மணி வரை பனி காணப்பட்டதால் ஓரிரு இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பனியால் ஐக்கிய அரபு எமிரேட் இலங்கை மற்றும் மஸ்கட்டில் இருந்து வந்த விமானங்கள் ஹைதராபாத்திற்கு திருப்பிவிடப்பட்டன.
அதே போல துபாயில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டு சென்றன. இதனால், பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றும் இந்த பனிமூட்டத்தால் காலையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்தும் லேசான பாதிப்பை சந்தித்தது நினைவிருக்கலாம்.