உதான் திட்டத்தினால் பலன்.. இன்று முதல் சென்னை-மைசூர் நகரங்களுக்கிடையே தினசரி விமான சேவை!
மைசூருவில் பிரசித்தி பெற்ற தசரா விழாவையொட்டி, இனி தினமும் சென்னையிலிருந்து விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது.
சென்னை: உதான் திட்டத்தின்கீழ் சென்னையிலிருந்து இனி குறைந்த கட்டணத்தில் மைசூரு செல்லும் விமான சேவை இன்று தொடங்கப்படுகிறது.
குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் விமான சேவை என்ற திட்டத்தின் கீழ் முக்கிய நகரங்களில் விமான சேவை தொடங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்கட்டமாக ஓசூர், சேலம் மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களில் இத்திட்டத்தின் கீழ் விமான சேவைகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உதான் திட்டத்தின் கீழ் மைசூருவில் முதல் முறையாக விமான சேவை இன்று தொடங்கப்படுகிறது. அதன் படி ட்ரூஜெட் என்ற விமான நிறுவனத்தின் விமானம் மைசூருவிலிருந்து புறப்பட்டு இன்று இரவு 6.50 மணிக்கு சென்னையை வந்தடையும்.
அதில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவும் பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விமானத்தில் வரும் பயணிகளுக்கு சென்னையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது.
புது வழி விமான சேவை தொடக்கத்தில் சென்னை- மைசூரு- சென்னை ஆகிய வழித்தடத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் மைசூரு விமான நிலையம் இரவு நேரங்களில் விமானங்கள் இறங்கும் மற்றும் புறப்படும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ட்ரூஜெட் விாமனத்தில் 70 பயணிகள் பயணிக்கலாம்.