செல்போன் ஆர்டர் செய்தவருக்கு 2 மாம்பழங்கள் அனுப்பி வைத்த பிளிப்கார்ட்!
ஹைதராபாத்: பிளிப்கார்ட் ஆன்லைன் சர்வீஸ் மூலம், செல்போன்களை ஆர்டர் செய்த நபருக்கு 2 மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜகிடல் பகுதியை சேர்ந்தவர் சிலுவேரி சிருச்சரண். கடந்த மே 26ம் தேதி பிளிப்கார்ட் நிறுவனம் மெகா சேல் என்ற பெயரில் தள்ளுபடி விலையில் பொருள் விற்பனை செய்தது. இதையறிந்த சிருச்சரண், ஆஸ் நிறுவன போனை ரூ.8,099-க்கு ஆர்டர் செய்துள்ளார். இவரது ஆர்டர் எண் OD002947033911410000 ஆகும்.
24 மணி நேரத்தில் டோர்டெலிவரி செய்யப்படும் என்ற அறிவிப்பை நம்பி, போனை எதிர்பார்த்து ஆசையோடு காத்திருந்தார், சிருச்சரண். பெட்எக்ஸ் நிறுவனத்தின் கூரியர் சர்வீஸ் மூலம், பார்சலும் வந்தது. ஆர்வத்தோடு பார்சலை திறந்து பார்த்த சிருச்சரணுக்கு அதிர்ச்சியே மிச்சமானது.
ஏனெனில், பார்சலுக்குள் இருந்தது இரண்டே இரண்டு மாம்பழங்களாகும். அதிர்ச்சியடைந்த சிருச்சரண், பிளிப்கார்ட் ஹெல்ப் மையத்துக்கு போன் செய்து புகார் கூறியுள்ளார். ஆனால், ஆர்டரை மாற்றித்தர பிளிப்கார்ட் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், மீடியாவுக்கு போனால், ஆர்டரை பிளாக் செய்துவிடுவோம் என்று பிளிப்கார்ட் தரப்பு கூறியதாகவும், சிருச்சரண் சில மீடியாக்களுக்கு தெரிவித்துள்ளார்.