நிரம்புகிறது வைகை அணை... 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மதுரை: வைகை அணை நிரம்பும் தருவாயை எட்டி விட்டதால் ஐந்து மாவட்டங்களின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையானது வேகமாக நிரம்பி வருகிறது. அந்த அணையின் மொத்தக் கொள்ளலவு 71 அடியாகும். தற்போது அணையில் நீர் இருப்பு 66 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் 5 அடிகளே அணை நிரம்பவுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணை திறக்கப்படவுள்ளது.
இதையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கரையோரமாக வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சென்னை அருகே ஏரி உடைந்தது
இதற்கிடையே சென்னை அருகே திருப்போரூர் பகுதியில் உள்ள தண்டலம் ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் பாசன நிலத்தில் தண்ணீர் புகுந்து பயிர்கள் வீணாகியுள்ளன.
சாலையில் மரம் விழுந்தது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கம் என்ற இடத்தில் சாலையில் மிகப் பெரிய பழமையான ஆலமரம் விழுந்துள்ளது. மழை காரணமாக மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையிலான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.