திறக்கப்பட்டது மேட்டூர் அணை... காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர்: மேட்டூர் அணை இன்று பாசனத்திற்காகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து காவிரிக் கரையோரமாக வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயருமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணை முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்கமாபுரிப்பட்டிணம், சின்னக்காவூர் ஆகிய காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி கரையையொட்டி வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருவதால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று இரவு 10 மணி முதல் 16 கண் பாலத்தின் வழியாக பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
தொடர் நீர்வரத்து காரணமாக, ஓரிரு நாட்களில் அணை முழுவதும் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால், மேட்டூர் அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
அணை நிரம்பினால் பல ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் என்பதால் இதனால் காவிரிக் கரையோரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.