கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு.. ஒகேனக்கல்லில் வெள்ள அபாயம்
Recommended Video
சேலம்: கர்நாடகாவின், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது.
ஏற்கனவே 1.70 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்ததால் ஏற்கனவே ஒகேனக்கல் வெள்ளத்தில் மிதக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் கூடுதல் நீரும் வந்து சேரும் போது, இங்கு வெள்ளப்பெருக்கு இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
தற்போதைய நிலையில் ஒகேனக்கல்லில் பாறைகளை தெரியாத அளவுக்கு எங்கெங்கும் தண்ணீர் ஓடி, கடல் போல் காட்சியளிக்கிறது. ஆற்றின் குறுக்கே இருந்த மரங்களில் சுமார் இருபது அடிக்கு மேலாக தண்ணீர் செல்வதால் மரங்களே மூழ்கும் நிலையில் உள்ளன.
கர்நாடகாவில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்கள் அனைவரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு 15 கிலோ மீட்டர்கள் முன்பாகவே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக ஒகேனக்கல்லில், குளிப்பதற்கும் பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.