தாமிரபரணியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் கனமழை நீடிப்பதால் தாமிரபரணியில் தண்ணீர் சீறி பாய்கிறது. இதனால் கரையோர மக்களூக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியை படுத்தி எடுத்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இந்த தொடர் மழையால் அணைகள், ஏரிகள் பெரும்பாலானவை நிரம்பி வழிகி்ன்றன. இடையில் சில நாட்கள் வெயில் தலை காட்டிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் மீண்டும் கனமழை தலை தூக்கியுள்ளது.
நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்த மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 141.60 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 147.34 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 116.60 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 82.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 70.86 அடியாகவும் உள்ளது. அணைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
காலை நிலவரப்படி கடனா நதி அணைப்பகுதியில் 50, பாபநாசம் 45, சேர்வலாறு 23, ராமநதி 25, கருப்பாநதி 15, குண்டாறு 16, நம்பியாறு 12, அடவிநயினார் கோயில் 3, மணிமுத்தாறு 19 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் பாபநாசம் தடுப்பனையான பாபநாசம் தலையணை பகுதியி்ல் இருந்து மட்டும் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் கடனா நதி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் உள்ளிட்ட பிற அணைகளின் தண்ணீரால் தாமிரபரணியில் வெள்ளம் சீறி பாய்கிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் மீண்டும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.