ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர், காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை நீடிப்பதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி, அந்த அணைகளிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் கடந்த 16-ஆம் தேதி முதல் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வியாழக்கிழமை மாலை முதல் நீர்வரத்து அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் வெள்ளமென கொட்டி வருகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை:
கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 10,958 கன அடியும், கபினி அணையிலிருந்து நொடிக்கு 12 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
22000 கனஅடிநீர்
இதனால், ஒகேனக்கல்லில் வெள்ளிக்கிழமை நீர்வரத்து நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததையடுத்து, ஐந்தருவி, பிரதான அருவிகளில் தண்ணீர் வெள்ளமாகக் கொட்டுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், காவிரியாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மேடான இடங்களுக்கு செல்ல வருவாய்த் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகளுக்குத் தடை
இதையடுத்து பரிசல் ஓட்டிகள் பரிசல்களை ஓட்ட போலீஸார் தடை விதித்தனர். அருவிப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது. மேலும், அருவிப் பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாத வகையில், போலீஸார், தீயணைப்புத் துறையினர் தடுப்புகள் அமைத்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம்
வியாழக்கிழமை காலை நொடிக்கு 1,078 கன அடியாக இருந்த நீர்வரத்து, வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 19,354 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் தற்போது மூன்றடி உயர்ந்து 50.14 அடியாக உள்ளது. குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து நொடிக்கு 801 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால், விரைவில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.