நிரம்பும் பில்லூர் அணை: பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கு- கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
கோவை: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பில்லூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் பவானி ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மழை காரணமாக 60 அடியாக இருந்த பில்லூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 83 அடியாக உயர்ந்தது. இந்தநிலையில் நேற்று இரவு தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இன்று காலை அணையின் நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியை எந்த நேரத்திலும் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றின் இரு கரையோரங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டுள்ளார்.
இதை அந்த பகுதி மக்களுக்கு தெரிவிக்கும் விதம் தண்டோரா போட்டு பொதுமக்களை பவானி ஆற்றின் கரையோர பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு உடமைகளை அங்கேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர்.