பொங்கி வரும் காவிரி.. ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
தருமபுரி: கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. நேற்று நீரின் அளவு 37,000 கனஅடியானது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம்- 40 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு- 12.08 டிஎம்சி ஆக உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் கேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.