பொதுமக்களிடம் சிக்கிய தாசில்தார்.. எங்கே எங்கள் எம்.பிக்கள் என்று கேட்டு ஆவேசம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்னும் வடியாமல் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அகற்றாமல் அலட்சியம் காட்டும் அரசையும், தங்களைச் சந்திக்க வராத எம்.பிக்கள் எங்கே என்று கேட்டும் தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் குறிஞ்சிநகர், அய்யப்பநகர், இந்திரா நகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. அங்கு வசித்து வந்தோரில் 300 பேர் மீட்கப்பட்டு போல்பேட்டை என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நேற்று எவ்வித உணவும் வழங்கப்படவில்லை. மாலை 3 மணிக்கு 100 பேருக்கு மட்டும் உணவு வழங்கப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், வெள்ள நீரை உடனடியாக அகற்ற கோரியும் போல்பேட்டை ஜங்ஷனில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதை்யடுத்து பேச்சுவார்த்தை நடத்த வந்த தூத்துக்குடி தாசில்தார் சந்திரன் மற்றும் போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்கள் பகுதி எம்பிக்கள் எங்கே போயினர், இவ்வளவு இழப்பு எங்களுக்கு ஏற்பட்ட பின்னரும் அவர்கள் எங்கு ஒளிந்துள்ளனர், ஓட்டு கேட்க மட்டும் வந்தார்களே என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
மக்களின் ஆவேசக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் காவல்துறையினரும், அதிகாரிகளும் அமைதியாக இருந்தனர்.