ரோடை மாத்தனும்.. மழை நீர் வடிகால் வசதிகளை மாத்தனும்.. சென்னைக்கு இது ரொம்ப அவசியம்!
சென்னை: மழையை எதிர்பார்த்தும் காத்திருக்கும் மக்கள் நெடுநாளைக்குப் பிறகு மழையைக் கண்டதும் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். கொண்டாடுகிறார்கள். அதுவே மழை பெரு மழையாகி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தால் என்னடா மழை இது எனப் புலம்பத் தொடங்கிவிடுவார்கள்.
பெருமழையானது, நகரம், கிராமம் என பாரபட்சமே இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கிராமங்களில் விவசாய நிலங்களெல்லாம், பயிரெல்லாம் நீரில் மூழ்கி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நகரங்களோ வேறு வகையிலான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. சமீபத்தில் பெங்களூரு நகரத்தில் வரலாறு காணாத பெருமழை 1540 மீ .மீ அளவு பெய்தது. சாலையெல்லாம் பெருவெள்ளம் சூழ்ந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் இடைஞ்சலுக்கு உள்ளானார்கள். தண்ணீரின் வீரியம் நேரமாக நேரமாக அதிகரித்து வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இப்போது சென்னை மிதக்கிறது.
மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ள இதுபேன்ற ஒரு தருணத்திலாவது நமது நாடு இப்படிப்பட்ட நிலைகளை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பது நலம். மேலை நாடுகளில் இது போன்ற இயற்கை பேரிடர்களை எப்படி சமாளிக்கிறார்கள் தெரியுமா. பார்க்கலாம். மேலை நாடுகளில் சாலை வசதிகள் பெரும் சிறப்பாக உள்ளது. பரந்து விரிந்த சாலைகள், முறையாக கடைப்பிடிக்கப்படும் போக்குவரத்து விதிகள், சரியான இடங்களில் சிக்னல் என்று அவர்கள் சாலை கட்டமைப்பை முழுமையாக செம்மையாக செய்துள்ளனர். ஆனால் நம் நாட்டிலோ கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரு நகரங்களிலும் சாலைகளெல்லாம் குண்டுகுழிகளே காணப்படுகின்றன. சென்னை நகரத்தில் குண்டு குழி இல்லாத சாலையே இல்லை எனலாம்,
வழுக்கலாக இருக்கும் சாலைகளுக்கு
சாலை விதிகள் சாலை குறியீடுகள் கொண்ட போர்டுகள், சாலை விதி மீறினால் விதிக்கப்படும் பைன் என எல்லா விஷயத்திலும் மேலை நாடுகளில் கறாராக இருப்பதால் மக்கள் அவற்றை சரியாக பின்பற்றுகிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மழை நேரத்தில் வழுக்கலாக இருக்கும் சாலைகளுக்கு அதை மைக்கில் தெரிவிக்க அந்த சாலைகளில் ஸ்லிப்பரி வென் வெட் என்ற சிக்னல் குறியீடு கூட உள்ளது. அந்த இடங்களில் வாகனதாரிகள் நிதானமாக போவார்கள். நம் நாட்டில் இப்படியெல்லாம் எதுவுமே கிடையாது.
ஜஸ்ட் கால் மணி நேரத்தில்
நம் ஊரில் மழையில் ஒரு மரம் விழுந்தால் பாதி பேர் வேடிக்கை பார்த்தபடி செல்வதே வழக்கம். சிலர் மின்வாரியத்திற்குப் போன் செய்தால் கூட உடனடியாக வந்து சரி செய்வது என்பது அரிதிலும் அரிதாகும். அந்த சாலை அன்று முழுவதும் பெரும் சிக்கலில் மாட்டியிருக்கும். இதுவே மேலை நாடுகளில் மழையில் ஒரு மரம் விழுந்து கிடைப்பதைக் கண்டால் 91 என்ற காவல் துறை எண்ணுக்கு அழைத்தால் போதும். அவர்களே தேவையான நபர்களை அழைத்துக் கொண்டு அந்த இடத்துக்கு வந்து விடுவார்கள். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஜஸ்ட் கால் மணி நேரத்தில் அங்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள் என்பதே.
இந்தியாவில் வானிலை அறிக்கை
இந்தியாவில் செய்திகளில் பார்க்கும் வானிலை அறிக்கை 24 மணி நேரத்தை குறித்து பேசுகிறது. அனால் மேலை நாடுகளிலோ ஒரு ஒரு மணி நேரத்துக்கு வானிலை எப்படி இருக்கும் என்ற தெளிவான அறிக்கை தருகிறார்கள். மேலை நாடுகளில் நமது நாட்டைப் போல இதமான தட்பவெப்ப நிலை இல்லாமல் கடும் கோடையும் கடும் குளிர் பனிப்பொழிவு என்றும் இருப்பதால் அவர்கள் வானிலையை அக்குவேறு ஆணிவேராக அலசும் திறமையோடு உள்ளனர். இங்கு மக்கள் தங்கள் மொபைலில் வைத்திருக்கும் ஆப்ஸ் காட்டுகிறபடி வெளி வெப்பத்தையோ குளிரையோ பொறுத்து தான் தங்கள் பயணங்களை தீர்மானிக்கின்றனர். வார விடுமுறை கொண்டாட்டங்கள் எல்லாம் பிளான் செய்யும்போதும் கண்டிப்பாக வானிலை அறிக்கையைப் பார்க்கின்றனர்.
வானிலை அறிக்கை படு துல்லியம்
அவர்களது வானிலை அறிக்கை படு துல்லியமாகவும் இருக்கிறது. 9-10 மணி வரை லேசான வெயில் என்று சொன்னால் லேசான வெயிலாக தான் இருக்கும். 11-12 சற்று மேகமூட்டம் என்றால் அந்த நேரம் மேகமூட்டம் இருக்கும். 12-1 லேசான மழை என்று வானிலை அறிக்கை சொன்னால் கண்டிப்பாக லேசான சாரல் இருக்கும். இப்படி அந்த வானிலை அறிக்கை கூறும் வானிலை நிலவரம் மிக துல்லியமானது. அனால் நாமோ இன்னும் அடுத்த 24 மணி நேரம் மேகமூட்டமாக இருக்கும். லேசான மழையையோ அல்லது இடியுடன் கூடிய ஒரு பெரிய மழையோ என்று ஒரு தெளிவில்லாத வானிலை அறிக்கையைத் தான் வருடக்கணக்காக கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்
இப்படிப்பட்ட தெளிவான வானிலை, புயல் கணிப்பை அவர்களால் தர முடிவதாலேயே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பெருமழை, வெள்ளம், கடும் பனிப்பொழிவு என பல இயற்கை பேரழிவிலும் கூட உயிரிழப்பைத் தவிர்க்க முடிகிறது. எல்லா மக்களுக்கும் உரிய நேரத்தில் அலைபேசியில் "அம்பர் அலெர்ட்" மெசேஜ் அனுப்பி மக்களுக்கு தகவல் தெரிவிப்பது, மக்களை வழிகாட்டுவது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வைத்து உரிய பாதுகாப்பை உரிய காலம் வரை வழங்கி அவர்களால் இர்மா போன்ற பெரும் புயல் சேதத்தில் கூட குறைந்த உயிர் சேதத்தில் மக்களை காக்க முடிகிறது .
கற்க வேண்டியது நிறைய உள்ளது
கண்டதையும் நாம் மேலை நாடுகளிடமிருந்து கற்கிறோம். ஆனால் இதுபோன்ற விஷயங்களில் நாம் கற்க வேண்டியது நிறைய உள்ளது அப்போதுதான் நாம் வளர்ந்த, வல்லரசு நாடாக முடியும். முறையான வெள்ள நிவாரணங்கள், மழைக்காலங்களில் வெள்ள வடிநீர் வசதி உள்ளிட்டவற்றை நாம் சரிவர செய்தால் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும். இதுபோன்றவற்றில் சிறந்து விளங்கும் நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதை நமது அரசுகளும் கடைப்பிடித்தால் மட்டுமே அவை மக்களின் அரசாக மதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
ஏற்ற இறக்கத்துடன் கூடிய சாலைகள்
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளின் சாலை வடிவம் நம் சாலைகளை போல ஒரே உயரத்தில் இல்லை. அங்கு சாலைகளின் கட்டமைப்பு சில இடங்களில் உயரமாகவும் பின் அடுத்து தாழ்வாகவும் ஒரு லேசான sine wave வடிவத்தில் உள்ளது. அப்படி இருக்கும் தாழ்வான பகுதியில் நீர் மண்ணுக்குள் செல்வதிற்கு ஏதுவான வட்ட வடிவ வாட்டர் ட்ரெய்னேஜ் அமைக்கப்படுகிறது. இப்படி சாலையில் அமைக்கப்படும் நீர் வடிகால் குழாய் 100, 200 மீட்டருக்கு கட்டாயம் ஓன்று இருப்பதால் இங்கு எவ்வளவு மழை பெய்தாலும் நீர் தேங்குவதே இல்லை. நம்ம ஊரில் இது போன்ற மிக விசாலமான சாலைகள் இல்லாவிட்டாலும கூட சாலைகளில் சரியான தூரத்துக்கு சரியான நீர் வடிகால் குழாய் அமைப்பது, ஏற்கனவே இருக்கும் சாக்கடைகளை அவ்வப்போது சுத்தப்படுத்துவது போன்றவற்றை செய்து வந்தாலே இப்படி நீர் தேங்கிய சாலைகளோடு மழை நீரில் மூழ்கி தவிக்காமல் மக்களையும் வாகனங்களையும் சேர்த்தே அரசு காப்பாற்ற முடியும்.
- Inkpena சஹாயா