சில மணிநேர மழைக்கே ஆடிப்போன சென்னை.. சாலையில் தேங்கிய நீரால் மக்கள் பெரும் அவதி!
சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: நள்ளிரவு முதல் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட வட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் நள்ளிரவு தொடங்கிய மழை பரவலாக பெய்தது.
பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆவடி, அம்பத்தூர், உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பம்மல், அனகாபுத்துர், தாம்பரம், தி நகர், சைதாப்பேட்டை, நந்தனம், ஈக்காட்டு தாங்கல், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, மந்தவெளி பகுதிகளிலும் மழை வெளுத்தது.
மக்கள் மகிழ்ச்சி
அடையாறு, தரமணி, வேளச்சேரி, கிண்டி, வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குளம்போல் தேங்கிய தண்ணீர்
மழையால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியது. மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.
மக்கள் அவதி
இதனால் வாகனங்கள் நீந்தியபடியே செல்கின்றன. முழங்கால் அளவுக்கு தேங்கியிருக்கும் நீரால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
மக்கள் கோரிக்கை
சாலையோரம் உள்ள கடைகளில் வாசல் வரை தேங்கியுள்ள நீரால் கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள நீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எப்படி சமாளிக்கப்போகிறது?
ஒரு இரவில் சில மணி நேரம் பெய்த மழைக்கே நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளது. இந்நிலையில் வரவுள்ள பருவமழை காலத்தை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரவலாக மழை
இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமின்றி விழுப்புரம், மாவட்டத்திலும் இரவு முதல் விடாமல் மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், சுற்றுவட்டாரங்களில் நல்லமழை பெய்துள்ளது.