வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாக்காளர் அட்டையை வீட்டுக்கே சென்று வழங்க முடிவு: ராஜேஷ் லக்கானி தகவல்
சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளர் அடையாள அட்டையை வீட்டுக்கே சென்று இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை என்பது தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால், வாக்காளர் அடையாள அட்டைக்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.அவர்களுக்கு நாங்களே வாக்காளர் அடையாள அட்டையைத் தயாரித்து இலவசமாக வீட்டுக்கே சென்று வழங்க முடிவெடுத்துள்ளோம்.
செல்போன் மெசேஜ், இணையதளம் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பித்தாலும் அவர்களுடைய வீட்டுக்கே வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த வசதிக்கான செல்போன் எண் விரைவில் அறிவிக்கப்படும். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் வெள்ள நிவாரணப்பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் பணிகள் தொடங்கப்படும். பெரும்பாலான வாக்குச்சாவடி அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்களாக இருப்பதால், அவர்களுக்கான வாக்காளர் பட்டியல் கள ஆய்வுப் பணிகள் தொடரும். சட்டப்பேரவைத் தேர்தலிலும் போதுமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு சிறப்பாக, பிரச்னைகள் இல்லாமல் நடத்தி முடிக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு "பேஸ்புக்', "டுவிட்டர்' மூலம் தகவல்கள் பரிமாறப்படும் என்றார் லக்கானி.