சதுரகிரி மலையில் 'திடீர்' வெள்ளப் பெருக்கு... 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக் கோவிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள தாணிப்பாறை அருகே உள்ள சதுரகிரி மலைமேல் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்தக் கோயிலுக்கு ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இன்று அமாவசை தினத்தையொட்டி இந்தக் கோவிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வழிபாட்டிற்காக சென்றிருந்தனர்.
இந்நிலையில், இவர்களில் 900 பக்தர்கள் திரும்பிய நிலையில், மலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென காட்டாற்று வெள்ளம் வந்ததால் 100க்கும் அதிகமான பக்தர்கள் ஆங்காங்கே திகைத்து நின்றனர். இதையடுத்து போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டனர். தற்போது அனைவரும் மலைக் கோவிலில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கின் தீவிரத்தை பொறுத்தே பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனேகமாக இன்று இரவு பக்தர்கள் அனைவரும் அங்கேயே தங்க வைக்கப்பட்டு காலையில் கீழை இறங்குவார்கள் என கூறப்படுகிறது.