சீர்காழி கொள்ளிட கரையோர பகுதியில் வெள்ளம்: அடித்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி.. மீட்பு பணி தீவிரம்
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளநீர் கரையோர கிராமங்களில் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
நாகை: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளநீர் கரையோர கிராமங்களில் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
நேற்று உடைப்பு
சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் திட்டுக்காட்டூர், அக்கரை, பொரம்பட்டு, ஜெயங்கொண்டம் பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது.
கரைகளை தாண்டி வெள்ளம்
700க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் இன்று சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று நீர் கரைகளை தாண்டி கிராமங்களில் சூழ்ந்துள்ளது.
வெளியேற முடியாமல் தவிப்பு
நாதல்படுகை, நாணல்படுகை, வெள்ளை மணல் திட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் வெளியேற முடியாமல் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அடித்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி
இதைத்தொடர்ந்து கொள்ளிடக் கரையோரம் வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை படகுகள் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாற்றுத்திறனாளி ஒருவர் மரத்தில் சிக்கினார். அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.