கொள்ளிடத்தில் வெள்ளம்... 700 வீடுகளில் பொருட்கள் அடித்து செல்லப்பட்டன.. மக்கள் பெரும் அவதி
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 700 வீடுகளில் இருந்த பொருட்கள் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
Recommended Video
சீர்காழி: கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 700 வீடுகளில் இருந்த பொருட்கள் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடகத்தில் உள்ள கே. ஆர்.எஸ், கபினி அணைகள் நிரம்பி அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் தமிழகத்தில் உள்ள பவானி, அமராவதி அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் முழுவதும் காவிரியில் பெருக்கெடுத்து ஓடியது.
2 லட்சம் கனஅடி
வினாடிக்கு 2.35 லட்சம் கனஅடி வீதம் முக்கொம்பு வந்ததால் அங்கிருந்து கொள்ளிடம், காவிரியில் தண்ணீர் பிரித்து அனுப்பப்பட்டது. கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளம் சென்றதால் அணைக்கரையில் இருந்து இந்த தண்ணீர் கடலுக்கு திறக்கப்பட்டது.
கிராமங்களில் வெள்ளம்
இந்த தண்ணீர் முழுவதும் நாகை மாவட்டம் கொள்ளிடத்தை தாண்டி, பழையாறு துறைமுகம் வழியாக கடலுக்கு சென்று கலந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2லட்சம் கனஅடி சென்றதால், இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் உள்ளமுதலைமேடு, நாதல்படுகை ஆகிய கிராமங்களுக்குள் புகுந்தது.
படகுகள் மூலம் மீட்பு
இந்த இரு கிராமங்களிலும் உள்ள 2000 மக்கள் உடனடியாக அங்கிருந்து படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு, ஆச்சாள்புரம் பள்ளியிலும், மாங்கனாம்பட்டு திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டனர்.
400 பேர் வெளியேற்றம்
கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள வெள்ளமணல் திட்டு என்ற கிராமத்திலும் வெள்ளம் புகுந்தது. கிராமத்தை சேர்ந்த 400 பேர் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள அளக்குடி நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த முகாம்களில் தங்கி உள்ள மக்கள் நேற்று முகாம்களை விட்டு வெளியேறி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் வீடுகள், நிலங்களை போய் பார்த்தனர்.
அரசு நிவாரணம்
அப்போது 700 வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டதாகவும், சேதமடைந்துள்ளதாகவும், அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் நாகை மாவட்டத்தில் 500 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.