திருப்பூரை தெறிக்க விட்ட நொய்யல் ஆறு- போக்குவரத்து நிறுத்தம்- வீடியோ
திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக நொய்யால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து வருவதால் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. பல மாதங்களுக்கு பிறகு நொய்யல் நதியில் நீர் சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை கடந்து, கரூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
தொழிற்சாலை சாயக்கழிவுகள் மற்றும் சாக்கடை கலந்து மிகக்கடுமையாக மாசடைந்துள்ள நொய்யல் ஆற்றில் இன்று அதிகாலையில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், மங்கலம் கிராமத்தில் நொய்யல் ஆற்றங்கரையோரமுள்ள நல்லம்மான் கோயில் நீரில் மூழ்கியது.
ஈஸ்வரன் கோவில் வீதிபாலம், அணைபாலம் ஆகியவற்றின் மீது வெள்ள நீர் ஒடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், ஆண்டிப்பாளையம் காலேஜ் சாலையை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. உயர்மட்ட பாலமும் வெள்ளத்தில் மூழ்கியதால், இரு பாலங்களிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திருப்பூர்வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.