12 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் வசிஷ்ட நதியில் கோடையில் கரைபுரண்டோடிய வெள்ளம்.. மகிழ்ச்சியில் மக்கள்!
12 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் வசிஷ்ட நதியில் கோடைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சேலம்: 12 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் வசிஷ்ட நதியில் கோடைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. கத்திரி வெயில் வரும் 28 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால் இதுவரை வாட்டி வந்ததை காட்டிலும் இனி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.
கோடை மழை
அதேநேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் வெப்பசலனம் காரணமாக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, நெல்லை, விருதுநகர், மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது.
வசிஷ்ட நதியில் வெள்ளம்
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக 12 ஆண்டுகளுக்கு பிறகு வசிஷ்ட நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இடி மின்னலுடன் மழை
ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாததால் விவசாயிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ஆத்தூரில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
கல்லாற்றில் இடி
10 மணி அளவில் சாரலாக தொடங்கிய மழை சுமார் 2மணி நேரம் கொட்டிதீர்த்தது. இதனால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆத்தூர் அருகே உள்ள கல்லாற்றில் திடீரென்று இடி விழுந்ததில், மழை நீர் வெள்ளம் என பாய்ந்து வசிஷ்ட நதிக்கு வந்தது.
12 ஆண்டுகளுக்கு பிறகு
இதனால் நள்ளிரவில் வசிஷ்ட நதியின் இரு கரையை தொட்டு மழைநீர் வெள்ளமாக ஓடியது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.