மழை, வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்கள் கட்டணமின்றி மாற்று அட்டை பெறலாம்
சென்னை: மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி மாற்று மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தற்போது தமிழகத்தில் மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்த வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்களில் கட்டணமின்றி வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள வாக்காளர் அடையாள அட்டையை இழந்த வாக்காளர்களுக்கு கட்டணமின்றி மாற்று வாக்காளர் அடையாள அட்டையை சிறப்பு முகாம்களில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தவிர மேற்கண்ட மாவட்டங்களில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு 9444123456 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி மாற்று வாக்காளர் அடையாள அட்டையை பெறும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளரது கைபேசி எண் தேர்தல் ஆணைய தரவு தளத்தில் பதிவு செய்யப்படவில்லை எனில், வாக்காளர் 1950 என்ற எண்ணினை தொடர்பு கொண்டு தனது விவரங்களை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.