காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.. தண்டோரா மூலம் அறிவிப்பு!
காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம்: காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை மீண்டும் அடித்து ஆட தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த தென்மேற்கு பருவமழை மீண்டும் வெளுத்து வருகிறது.
கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி கேரளாவில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
நிரம்பி வழியும் அணைகள்
கர்நாடகாவில் கொட்டும் மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அதிகளவு நீர்திறப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் மழையால் கர்நாடகாவின் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி வழிகின்றன. ஏற்கனவே பெய்த மழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு அதிகளவு நீர் திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட மேட்டூர்
இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 124 அடியை எட்டியது. இதன்காரணமாக காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
1.25 லட்சம் கனஅடி
இந்நிலையில் தற்போது மீண்டும் அதிகளவு நீர் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதன் காரணமாக காவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தண்டோரா மூலம் எச்சரிக்கை
பி.என்.பட்டி கிராமத்தில் உபரி நீர்போக்கி பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் குளிக்கவோ துணிதுவைக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.