எப்படி பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பப் போகிறோமோ.. தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்
சென்னை: சென்னையின் பல பகுதிகளில் இன்னும் மழை நீர் முழுமையாக விலகவில்லை. இதனால் தண்ணீரில் தத்தளித்து வரும் மக்கள் நாளை பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் எப்படி தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப் போகிறோமோ என்று பரிதவித்து வருகின்றனர்.
சென்னையையும், அதன் புறநகர்களையும் உலுக்கிய கன மழையின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை சென்னை மக்கள். சென்னையின் புறநகர்கள் பல நீரில் இன்னும் மிதந்து கொண்டுள்ளன. நகர்ப்புறத்திலும் கூட சில பகுதிகள் தொடர்ந்து நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.
அய்யப்பன்தாங்கல் அருகேயிருக்கும் ஜானகிராமன் நகர் மற்றும் ஈவிபி நகரைச் சுற்றிலும் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கிறது.. அந்த நகரைச் சுற்றிலும் 1000 வீடுகள் இருக்கின்றன. கழுத்தளவு தண்ணீரும், சில இடங்களில் மார்பளவும் இருப்பதால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழலில் இருக்கிறார்கள்.
உள்ளூர் ஆளும் கட்சிக்காரர்களிடமும், மாநகராட்சியிடமும் சொல்லியும் இதுவரையில் யாரும் வந்து எட்டிப் பார்க்கவில்லையாம். இந்த நிலையில் நாளை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இப்படி தண்ணீர் சூழ்ந்துள்ளநிலையில் பிள்ளைகளை பள்ளிகளுக்கு எப்படி அனுப்புவது என்பது தெரியாமல் வி்ழித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
தங்களது பகுதிக்கு படகுகளை விட்டால்தான் நிலைமையை சமாளிக்க முடியும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.