முடியலை சாமி.. கொஞ்சம் விட்டு விட்டு பெஞ்சா தேவலை.. பரிதாப சென்னை!
சென்னை: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து யாராவது எட்டிப் பார்க்கும்போது, சென்னை அப்படியே நகர்ந்து வங்கக் கடலுக்குள் போய் விட்டதோ என்று சந்தேகப்பட்டு சாட்டிலைட்டை சென்னைப் பக்கம் திருப்பும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது சென்னையில். கொட்டும் மழையில் சென்னை நகரம் அப்படியே மிதந்து கொண்டுள்ளது.
முதல் முறையாக கொட்டித் தீர்த்த மழை முடிந்து சில நாட்கள் இடைவெளியில் தற்போது மீண்டும் ஒரு வேக மழை சென்னை நகரை நனைத்தெடுத்து வருகிறது. விடிய விடிய பெய்த மழை போதாமல் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் சென்னை நகரில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்கள் தப்பியுள்ளனர். ஆனால் அலுவலகம் போவோர்தான் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
எங்க பார்த்தாலும் தண்ணீர்
சென்னையிலும், புறநகரிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. முதல் மழையின்போது தேங்கிய தண்ணீரே இன்னும் வடியாத நிலையில் அடுத்த மழை வந்து விட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அட்டைகள் படையெடுப்பு
மழை கொட்டித் தீர்த்து வருவதால் பூச்சிகள் படையெடுப்பு அதிகரித்துள்ளது. அட்டைப் பூச்சிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றன. கூடவே பூரான், நண்டு என பலவிதமான ஜந்துக்கள் உலா வருகின்றன. பாம்புகளும் அவ்வப்போது எட்டிப் பார்த்துச் செல்கின்றன.
மிதக்கும் குடிசைகள்
சென்னை நகரின் குடிசைப் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. பல குடிசைகள் சேதமடைந்துள்ள நிலையில் தண்ணீரில் குடிசைப் பகுதிகள் மிதக்கும் நிலையும் காணப்படுகிறது.
படகு பயணம்
வேளச்சேரியில் உதயம் நகருக்குப் பின்புறம் உள்ள குடிசைப் பகுதிகள் வழக்கம் போல நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு தெர்மகோல் படகுப் போக்குவரத்தை மக்கள் தொடங்கியுள்ளனர்.
மிதக்கும் புறநகர்கள்
சிட்டிக்குப் போட்டியாக புறநகர்களும் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏற்கனவே பெய்த மழையால் தேங்கிய நீரே வடியாமல் உள்ள நிலையில் மீண்டும் மழை வந்துள்ளதால் நீர் இருப்பு மேலும் கூடியுள்ளது.
விட்டு விட்டு பெய்யலாமே
சென்னைக்கு மழை மிக மிக அவசியம். அதேசமயம், இப்படி அடை மழையாக பெய்தால் ஊர் தாங்காது, மக்கள் தாங்க மாட்டார்கள். எனவே விட்டு விட்டுப் பெய்தால் யாருக்கும் பாதகமில்லாமல் போகுமே. வருண பகவான் இதை கணிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை சற்று சிக்கலாகத்தான் உள்ளது.