அடையாறு வெள்ளத்தில் அடையாளம் தெரியாமல் போன பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தலைமையகம்
சென்னை: அடையாறு ஆற்றில் பெருகிய வெள்ளத்திற்கு கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் தலைமை அலவலகமும் தப்பவில்லை. 30 அடி உயரத்திற்கு மேல் பாய்ந்த வெள்ளத்தில் அலுவலகம் மூழ்கியதால் அங்கிருந்த அனைத்து ஆவணங்களும் நனைந்து நாசம் அடைந்து விட்டது. பல ஆவணங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி அதிகாலை வரை விடாமல் பெய்த அடைமழையால் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. செம்பரம்பாக்கம் ஏரியையும் திறந்து விட்டதால் குன்றத்தூர், நந்தம்பாக்கம், மணப்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சூளைபள்ளம், சைதாப்பேட்டை, கோட்டூர் புரம் உள்பட பல பகுதிகள் பெருத்த சேதம் அடைந்துள்ளன.
கல்வி நிறுவனங்கள் வெள்ளத்தில் மிதக்க... அரசு அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும் லட்சக்கணக்கான வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கின. இதே போல் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப் புலனாய்வுத்துறை தலைமை அலுவலகமும் வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் அங்கிருந்த அனைத்து ஆவணங்களும் நாசம் அடைந்து விட்டது. பல ஆவணங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது.பொருளாதார குற்றப் புலனாய்வு துறை தலைமை அலுவலகத்தின் கீழ் தளம் கார் பார்க்கிங் ஆக செயல்பட்டது. முதல் மாடி, 2ம் மாடியில் அதிகாரிகள் அலுவலகங்கள் உள்ளன. வெள்ளம் சூழ்ந்த போது தரை தளம் மூழ்கி முதல் மாடியில் 1 ஆள் உயரத்துக்கு தண்ணீர் புகுந்து ஓடியது.
இதில் அங்கிருந்த ஆவணங்கள், வழக்கு சம்பந்தமான பைல்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டது. சில ஆவணங்களை வெள்ள நீர் அடித்துச் சென்று விட்டது.
ரியல் எஸ்டேட் மோசடி வழக்குள், சீட்டு பண மோசடி வழக்குகள், வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் உள்ள மோசடி வழக்குகள் ஆகியவற்றின் கோப்புகளும் முழுவதும் நாசம் அடைந்துள்ளது. பாதி கோப்புகளை காணவில்லை.
அங்கிருந்த பீரோ, நாற்காலி, கம்ப்யூட்டர்கள், வழக்கு கட்டுகள் அனைத்தும் வெள்ளத்தில் சின்னா பின்னாமாகி கிடக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் இந்த துறையின் கீழ் செயல்படும் 3 ஆயிரம் போலீசாரின் சர்வீஸ் குறித்த பதிவுகள், வேலையில் சேர்ந்த பயோ-டேட்டா, மருத்துவ விடுப்பு, மெமோ, ரிட்டயர்டு விவரங்கள் புலன் விசாரணை வழக்கு ஆவணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி நாசம் அடைந்து விட்டது.
ஏ.டி.ஜி.பி. பிரதீப் பிலிப், ஐ.ஜி. அசோக்குமார், மகேஷ் தயாள், சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உள்பட போலீஸ் சூப்பிரண்டுகள், டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள் அலுவலகங்கள் அனைத்தும் இந்த கட்டிடங்களில் தான் செயல்பட்டு வந்தன.
உருக்குலைந்து கிடக்கும் குற்றப்புலனாய்வு அலுவலகத்தை உடனடியாக சீர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் டி.ஜி.பி. உள்பட அதிகாரிகள் பார்வையிட்டு சுத்தப்படுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அங்கு சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.