சாய்பாபாவுக்கு படைத்த பூக்கள் நிறம் மாறிய அதிசயம்.. நாகர்கோவிலில் பக்தர்கள் பரவசம்
நாகர்கோவில்: சாய்பாபா வழிபாட்டுக்காக பயன்படுத்திய மாலை நிறம் மாறியதால் அங்கு பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் அருகேயுள்ள, குலசேகரம், கூடை தூக்கி பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ணா கோவில் உள்ளது. இங்கு சாய்பாபாவுக்கு தனி சன்னதியும் உள்ளது. இங்கு உள்ள சாய்பாபாவுக்கு வியாழக்கிழமைதோறும் விசேஷ பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்களும் கலந்துகொண்டு ரோஜா மலர்களை தூவி சாய்பாபாவை வழிபடுவார்கள்.
இங்கு உள்ள சாய்பாபாவுக்கு மலர்கள் தூவி பக்தர்கள் வழிபட்டபோது ரோஜா மலர்கள் நிறம் மாறியது. சிவப்பு நிற ரோஜா மலர்கள் பூஜைக்கு பிறகு ஊதா, இளம்மஞ்சள் மற்றும் ரோஸ் நிறத்தில் மாறியது. இதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இந்த செய்தி அப்பகுதி மக்களிடம் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் சாய்பாபா கோயிலுக்கு திரளாக வந்தனர். அங்கு சாய்பாபா சிலை மற்றும் சாய்பாபா உருவப்படத்தின் அருகே வைக்கப்பட்ட ரோஜா மலர்கள் நிறம் மாறி இருந்ததை பார்த்து பக்தர்களை பரவசம் அடைந்தனர். பூஜை செய்யப்பட்ட ரோஜா மலர்களை பக்தர்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
அந்த மலர்களும் நிறம் மாறியதால் பக்தர்களிடையே பரபரப்பு நிலவுகிறது. இதுபற்றி பக்தர்கள் கூறும்போது ரோஜா மலர்கள் பூஜையின்போது நிறம் மாறுவது சாய் பாபாவின் அற்புதம் என்று கருதுவதாகவே தெரிவித்தனர்.