பூக்களின் விலையை தாறுமாறாய் உயர்த்திய ஓணம் பண்டிகையும்...முகூர்த்த தினங்களும்!
கோயம்பேடு: ஓணம் பண்டிகை நெருங்கி வருகின்ற நிலையில் பூக்களின் வரத்து குறைந்ததால் மல்லிகை மற்றும் கனகாம்பரத்தின் விலை தாறுமாறாக ஏறியுள்ளது.
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகிற 28 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை வரவேற்கும் விதத்தில் கேரள பெண்கள் தங்களது வீட்டு வாசல்களில் 10 நாட்களுக்கு தினமும் அத்தப்பூ கோலம் போடுவார்கள்.
அதே நேரத்தில் ஆடி மாதம் முடிந்து நேற்று முன் தினம் ஆவணி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் திருமண முகூர்த்த நாட்களும் நிறைய வரும். நேற்று ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளாகும்.
பூக்களின் தேவை அதிகரிப்பு:
எப்போதுமே இந்த மாதத்தில் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் வரத்து குறையும் போது பூக்களின் விலை பல மடங்கு உயரும்.
12 லாரிகளில் மட்டுமே:
இந்த வகையில் கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு இன்று பூக்களின் வரத்து குறைவாகவே இருந்தது. இங்கு 50 லாரிகளில் பூக்கள் வரும். ஆனால் இன்று காலையில் 12 லாரிகள் மட்டுமே வந்துள்ளன.
இருமடங்காக உயர்வு:
இதனால் மல்லிகை, கனகாம்பரம் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று ரூபாய் 100க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிப்பூ இன்று 700 ஆக உயர்ந்துள்ளது. 1 கிலோ கனகாம்பரத்தின் விலை ரூபாய் 450 இல் இருந்து 800 ஆகியுள்ளது.
தாறுமாறாய் உயர்ந்த விலைகள்:
இதே போல 80 ரூபாய்க்கு விற்பனையான சாமந்தி ரூபாய் 180 ஆகவும், ரூபாய் 30 க்கு விற்பனையான கோழிக் கொண்டை பூ ரூபாய் 60 ஆகவும் உயர்ந்துள்ளது. முல்லை ரூபாய் 70 இல் இருந்து ரூபாய் 150 ஆகவும், ரோஸ் ரூபாய் 80ல் இருந்து ரூபாய் 120 ஆகவும், சம்மங்கி ரூபாய் 90 இல் இருந்து 240 ஆகவும் கூடியுள்ளது. ரூபாய் 70க்கு விற்கப்பட்ட ஒரு கட்டு அரளிப்பூவின் விலை 150 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதிகரிக்கும் பூக்கள் விலை:
பூக்களின் விலை அதிகரித்துள்ளதால், திருமணத்துக்கான பூ அலங்கார பணிகளுக்கான செலவும் அதிகரிக்கும். உதாரணத்துக்கு ரூபாய் 35 ஆயிரம் மதிப்பிலான பூக்களை கொண்டு செய்து முடிக்கப்படும் அலங்கார பணிகளுக்கான செலவுக்கு ரூபாய் 70 ஆயிரம் ஆகும் என்று பூ வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
இனிமே இப்படித்தான்:
இந்த மாதம் முழுவதுமே திருமண முகூர்த்த நாட்கள் அதிகம் இருப்பதாலும், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியிருப்பதாலும் வரும் நாட்களில் இந்த விலை உயர்வு இன்னும் அதிகமாகும் என்றே வியாபாரிகள் தெரிவித்தனர்.