அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு பிரிவு தொடக்கம்.. அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த சிறப்புப் பிரிவு 24 மணிநேரமும் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அரசு மருத்துவமனைகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் ரத்தப்பரிசோதனை செய்யப்படுகிறது என்றம் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். விடுமுறை நாட்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்குவால் உயிரிழப்பு இல்லை என்ற நிலை உருவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் விரைவில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்தார்.