திணறும் காய்கறி வியாபாரம்... வியாபாரிகள் கவலை
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் வரத்து அதிகமாக இருப்பதால் காய்கறிகள் விலை அதிகமாகவும், சில காய்கறிகள் விலை குறைவாகவும் விற்பனையாகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள அப்டா, வடசேரி கனகமூலம் சந்தைகளுக்கு பெங்களூர், ஒட்டன்சத்திரம், மதுரை மற்றும் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இவை மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு தரம் பிரித்து சில்லறை விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் சில காய்கறிகள் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனை ஆகிறது. தற்போது கேரட் தரத்தை பொறுத்து ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. அனைத்து காய்கறிகளிலும் ரூ.2 முதல் ரூ.5 வரை விலை குறைந்துள்ளது. வரிகத்தரிக்காய் ரூ.22, நாட்டுகத்தரிக்காய் ரூ.35, முட்டைகோஸ் ரூ.15, பீட்ரூட் ரூ.20, கேரட் ரூ.15 முதல் 30 வரை விற்பனையாகிறது.
பீன்ஸ் ரூ.40, வெண்டைக்காய் ரூ.20, இஞ்சி ரூ.70, சீனி அவரை ரூ.24, கோழி அவரை ரூ.30, ஆப்பிள் தக்காளி ரூ.14, நாட்டு தக்காளி ரூ.8 முதல் 12 வரை விற்பனையாகிறது. வெள்ளரி ரூ.20, பூசணிக்காய் ரூ.15, புடலை ரூ.12, சவ்சவ் ரூ.40, காலி பிளவர் ரூ.25, சுரக்காய் ரூ.20, நீள மிளகு ரூ.20, உருண்டை மிளகு ரூ. 35, வழுதனை ரூ.20, கோவக்காய் ரூ.35, சேனை ரூ.35, முருங்கைக்காய் ரூ.40 ஆகிய விலையில் விற்பனையாகிறது.
இது குறித்து கனகமூலம் சந்தை மொத்த வியாபாரி ரமேஷ் கூறியதாவது: சபரிமலை சீசன் மற்றும் விரத நாட்களில் காய்கறி விலை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது காய்கறி வரத்து அதிகரிப்பால் விலை உயராமல் உள்ளது. குறிப்பாக, கோவக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், உருட்டு மிளகாய், விலை சற்று உயர்ந்துள்ளது. ஆனால் மற்ற காய்கறிகள் ரூ.2 முதல் ரூ.5 வரை விலை குறைந்துள்ளது என்றார்.