திமுக பிரமுகர் வீட்டில் ரூ.3 கோடி.. அதிமுக பிரமுகரிடம் ரூ. 50 லட்சம்: பறக்கும் படை பறிமுதல்
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மடிப்பாக்கத்தில் அதிமுக கவுன்சிலர் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 50லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது.
பறக்கும் படை அதிகாரிகள் இரவு-பகலாக அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதுவரை ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட சுமார் ரூ. 90 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகரில் தி.மு.க. பிரமுகர் ஒருவரது வீட்டில் நேற்றிரவு பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சில சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சோதனையில் ரொக்கமாக ரூ.3 கோடி ரொக்கபணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரிகள் , திமுக பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.3 கோடியை பறிமுதல் செய்தோம் என்று தெரிவித்தனர்.
அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 50 லட்சம்
மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோவில் அருகே வசித்து வரும் 169-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் ஜெயச்சந்திரன் வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தேர்தல் அதிகாரி செந்தில்வேல் தலைமையில் அதிகாரிகள் நேற்று இரவு ஜெயச்சந்திரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்று அதிகாலை வரை நீடித்தது.
அப்போது கட்டு கட்டாக ரூ. 40 லட்சத்து 38 ஆயிரத்து 148 ரொக்கம் இருந்தது. பணத்திற்கான ஆவணம் இல்லை. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரத்தில் எழும்பூர் பகுதியில் நடத்திய 2 சோதனைகளில் கோடிக்கணக்கான பணத்தை பறக்கும் படை அதிகாரிகள்-வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அரசியல் கட்சிகளை சார்ந்த பலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சென்னையில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குப்பதிவிற்கு முன்பாக இன்னும் யார் யார் வீட்டில் எத்தனை கோடிகள் பிடிபடுமோ தெரியலையே?