ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாகன சோதனையில் ரூ.42 லட்சம் பணம் சிக்கியது
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில், திருவாணைக்காவல் கும்பகோணத்தான் சாலையில் இரண்டாவது தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்மலிங்கம் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
அப்போது, ஒரு மாருதி காரில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துவரப்பட்ட ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த காரில் வந்த முரளி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சீர்காழியில் இருந்து வருவதாகவும், தான் சொந்தமாக நடத்தி வரும் இறால் பண்ணை தொடர்பாக பணத்தை எடுத்து வந்ததாகவும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே வசித்து வருவதாகவும் அவர் போலீசார் விசாரணையில் கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் தேர்தல் பிரிவு அலுவலர் காதர் மொய்தீன், இதுதொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.