இடைக்கால பட்ஜெட் எதிரொலி: கார்கள், செல்போன், ஏசி, பிரிட்ஜ் விலை குறையும்!
சென்னை: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உற்பத்தி வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால் நுகர்பொருட்கள் பலவற்றின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மொபைல் போன் உற்பத்திக்கான வரி 12%ல் இருந்து 10%ஆக குறைக்கப்பட்டது.
அதேபோல் சிறியரக கார்கள், பைக் உற்பத்தி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக குறைபக்கப்பட்டுள்ளது. நடுத்தர ரக கார்களுக்கான உற்பத்தி வரி 24 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் பல தொழில் துறைகளுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கார், இரு சக்கர வாகனங்கள், ஏசி மற்றும் பிரிட்ஜ் போன்றவற்றின் விலைகுறைய வாய்ப்பு இருக்கிறது.
ப.சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இதர முக்கிய அம்சங்கள்:
கடந்த ஓராண்டில் நூற்றுக்கணக்கான் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை நாட்டின் வளர்ச்சி 5.2 சதவீதமாக இருக்கும். நாட்டின் நிதி பற்றாக்குறை 4.6 சதவீதத்துக்குள் கட்டுபடுத்தபபட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார அடித்தளத்தை அசைக்க யாரையும் அனுமதிக்க முடியாது.சில ஆண்டு காலமாக சவாலாக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வந்துள்ளது.நாட்டின் விவாசாய உற்பத்தி வரலாறு காணாத அளவு உயர்ந்து 263 மில்லியன் டன்களாக உள்ளது.
உணவு பணவீக்க குறைந்திருந்தாலும் அது தொடர்ந்து கவலைக்குரியாதாகவே உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் இருப்பது போன்ற பொருளாதார சூழ்நிலை இந்தியாவில் உள்ளது. நடப்பாண்டில் நாட்டின் ஏற்றுமதி 6.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
.பணவீக்கத்தை கட்டுபடுத்த அரசும் ரிசர்வ் வங்கியும் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை நாட்டின் வளர்ச்சி 5.2 சதவீதமாக இருக்கும்.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.