கன்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடல் பாடிய கோவன் கைது
சென்னை: ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவன் கைது செய்யப்பட்டார்.
ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார் கைது செய்யப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்னால் கோவன் தலைமையில் போராட்டக்காரர்கள் திரண்டனர்.
கன்யா குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் ஏபிவிபி அமைப்பை நீக்க வேண்டும் என்று கோரியும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
அப்போது மத்திய அரசைக் கண்டித்து, "நெருங்குதடா! இருள் நெருங்குதடா! காவி இருள் நெருங்குதடா!" என்ற பாடலை பாடிய கோவன், கருத்துரிமைக்கெதிராக மாணவர் கன்யா குமார் கைது செய்யப்பட்டிருப்பதாக பேசினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவன் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கெனவே மதுவிலக்கை வலியுறுத்தி 'மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடலைப் பாடியதற்காக கோவன் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக பாடலை பாடி கைதாகியுள்ளார் கோவன்.