வந்துட்டாங்கல்ல, வந்துட்டாங்கல்ல... தினகரன் வெற்றி, ஐடி ரெய்டு கூட்டி கழிச்சு பார்த்தா சரியா வரும்!
டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான 6 இடங்களில் மீண்டும் வருமான வரி சோதனை தொடங்கியுள்ளது.
சென்னை : டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான 12 இடங்களில் மீண்டும் வருமான வரி சோதனை தொடங்கியுள்ளது.
சசிகலாவின் உறவினர்களின் வீடு மற்றும் நிறுவனங்களில் நவம்பர் மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், மீண்டும் இன்று வருமான வரி சோதனை தொடங்கியுள்ளது.
சென்னையை அடுத்த படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, ஸ்ரீ சாய் நிறுவனம், ஸ்ரீ சாய் கார்டன், இளவரசியின் மருமகனுக்கு சொந்தமான சென்னை அடையாறில் உள்ள கார்த்திகேயனின் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
நவம்பர் மாத மெகா ரெய்டு
கடந்த நவம்பர் மாதத்தில் தமிழகத்தையே உலுக்கிப் போட்ட மிகப்பெரிய வருமான வரி சோதனை என்றால் அது சசிகலா குடும்பத்தில் நடந்த சோதனை தான். ஜெயா டிவி அலுவலகத்தில் தொடங்கிய சோதனையானது,அதன் சிஇஓ விவேக், ஜாஸ் சினிமாஸ் என்று மொத்தம் 190 இடங்களில் சோதனை நடந்தது.
தொடர் ரெய்டு
சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு, கல்லூரி, கணவர் நடராஜனின் தஞ்சாவூர் வீடு, டாக்டர் சிவக்குமார் வீடு, கிருஷ்ணப்ரியாவின் தி.நகர் வீடு என்று வருமான வரி அதிகாரிகளின் லென்ஸ் பார்வை விரிந்தது. இதோடு சசிகலா, தினகரனுக்கு ஜோதிடம் பார்த்த கடலூர் ஜோதிடர் வீடு, புதுச்சேரி லட்சுமி ஜூவல்லரி என்று வருமான வரி சோதனை அனல் பறந்தது.
விவேக் வீட்டில் கடைசி வரை நீடித்த சோதனை
மற்ற எல்லா இடங்களிலும் சோதனை முடிந்தாலும் ஜெயா டிவி, விவேக் வீடு, கிருஷ்ணப்ரியா வீட்டில் மட்டும் 3 நாட்களைக் கடந்து சோதனை நடந்தது. ஒரு வழியாக கடைசியாக விவேக் வீட்டில் இருந்தும் வெளியேறிய அதிகாரிகள் விவேக்கையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விசாரணைக்கு ஆஜர்
ஆனால் கிருஷ்ணப்ரியா, விவேக் உள்ளிட்ட 300 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து அவர்களும் வருமான வரி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர்.
தினகரன் வீட்டில் இல்லை
இந்த வருமான வரி சோதனையின் போது தினகரனின் சென்னை வீட்டில் சோதனை நடைபெறவில்லை மாறாக அவரது பண்ணை வீட்டில் மட்டும் வருமான வரி சோதனை நடந்தது. இந்த வருமான வரி சோதனையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டன் இல்லத்திலும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் சசிகலா அறையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, மூட்டை மூட்டையாக கடிதங்களை அள்ளிச் சென்றனர்.
அரசியல் கட்சிகள் கருத்து
சசிகலா குடும்பத்தை மிரட்டும் விதமாக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக உத்தரவின் பேரில் வருமான வரி சோதனை நடைபெறுவதாக அரசியல் கட்சியினர் விமர்சித்தனர். எது நடந்தாலும் சட்ட ரீதியில் சந்திப்போம் என்று கூலாக இருந்தார் தினகரன்.
மிரட்டும் சோதனையா?
அண்மையில் ஆர்கே நகர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தினகரன் அந்த தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை பலரும் கேலி செய்தனர். இந்நிலையில் தினகரன் நாளை மறுதினம் பொறுப்பேற்க உள்ள நிலையில் மீண்டும் சசிகலா குடும்பத்திற்கும், தினகரனுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக வருமான வரி சோதனை நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.