புட்டு, களி, அடை கூழ்... காரைக்குடி பள்ளியைக் கலக்கிய உணவுத் திருவிழா
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா 28.10.2015 அன்று நடைபெற்றது. மாணவ, மாணவியர் விதம் விதமான இயற்கை உணவுகளால் அனைவரையும் அசத்தினர்.
இவ்விழா மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இவ் உணவுத் திருவிழாவில் சுமார் 94 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நம் பாரம்பரிய உணவுகளான கம்பு, கேழ் வரகு, திணை, கொள்ளு, குதிரை வாலி, பாசிப் பயறு, ஆகிய தானிய வகைகளின் மூலம் புட்டு, களி, கட்லட், அடை, கூழ் போன்ற பல்வேறு உணவுகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
பழங்கள், காய்கறிகளின் மூலம் சாலட், கீரை சாதம், வெஜ் பிரியாணி போன்ற உணவுகளும் இடம் பெற்றிருந்தன.
அவர்கள் அந்த உணவுகளில் அடங்கியுள்ள சத்துக்களையும்,அதன் நன்மைகளையும் பார்வையாளர்களுக்கு விளக்கி கூறினர். கிராமக் கல்விக்குழுத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களின் உணவு கண்காட்சியை பார்வையிட்டனர்.
அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். போட்டியில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி,முத்துபட்டினம் பட்டதாரி ஆசிரியர் பாக்கியம், ஆலங்குடியார் வீதி நகராட்சி உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி பட்டதாரி ஆசிரியர் கண்ணம்மை, அரசு உயர்நிலைப்பள்ளி, இலுப்பக்குடி ஆசிரியை பவளரசி நடுவர்களாக இருந்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் கோமதி செய்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார்.