பெட்ரோல், டீசல் விலை விர்.. காய்கறிகள் விலை சர்.. கடும் அவதியை நோக்கி மக்கள்!
சென்னை: டீசல் மற்றும் பெட்ரோலின் தொடர் விலையேற்றம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏற ஆரம்பித்துள்ளன. மத்திய அரசு இந்த விவகாரத்தில் இன்னும் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தினமும் நிர்ணயிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியபோதே, இது விலையேற்றத்தை ரகசியமாக ஊக்குவிக்கும் நடவடிக்கைதான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது சாதாரண நிகழ்வுபோல காண்பிக்க தினசரி விலையேற்ற நடவடிக்ககை உதவும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
விலையேற்றம் தொடர்கதை
எதிர்க்கட்சிகள் கூறியதை போலத்தான் இப்போது நிலைமை அரங்கேறியுள்ளது. யாருமே உணராத வகையில் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே வந்தது. கடந்த 3 மாதங்களில் தலைநகர் டெல்லியில் லிட்டருக்கு 7 ரூபாய் விலை உயர்வை சந்தித்துள்ளது பெட்ரோல். ஜூலை 1ம் தேதி லிட்டருக்கு ரூ.63.09 என்று இருந்த விலை இப்போது லிட்டருக்கு ரூ.70.38ஐ தொட்டது.
காய்கறிகள் விலை
பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் என்பது, காய்கறிகள் விலை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து செலவும் காய்கறி மீதே சுமத்தப்படும் என்பதால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
பண வீக்க விகிதம்
காய்கறிகள் மீதான பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 44.91 சதவீதத்தை தொட்டது. அது ஜூலையில் 21.95 என்ற அளவில் இருந்தது. உணவு பொருட்கள் மீதான பணவீக்க விகிதம், ஜூலையில் 2.16சதவீதமாகவும், ஆகஸ்டில் 5.75 சதவீதமாகவும் உயர்ந்தது.
எரிபொருள்
உற்பத்தி பொருட்கள் மீதான பண வீக்கம் ஜூலையில் 2.18 சதவீதமாகவும், ஆகஸ்டில் 2.45 சதவீதமாகவும் இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் மீதான பண வீக்கம் ஜூலையில் 4.37 சதவீதமாகவும், ஆகஸ்டில் 9.99 சதவீதமாகவும் இருந்தது.
வெங்காயம் காஸ்ட்லி
மொத்த விலையேற்ற குறியீட்டு எண் என்பது 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளது. ஜூலையில் அக்குறியீடு 1.88 சதவீதமாக இருந்தது. கடந்த மாதம் அது 4.41 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. காய்கறிகளில் வெங்காயத்தின் விலையேற்றம் அதிகபட்சமாக, அதாவது 88.46 சதவீதம் என்ற அளவிலும், உருளைக்கிழங்கின் விலையேற்றம் 43.8 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.