கருணாநிதி நினைவிடத்தில் காலை முதல் மாலை வரை உணவு- ஜெ. அன்பழகன் ஏற்பாடு
கருணாநிதி நினைவிடம் வருவோருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கருணாநிதியை சமாதியை பார்க்க வருபவர்கள் அனைவருக்கும் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மெரினாவில் கருணாநிதியின் சமாதியை பார்க்க வரும் கூட்டம் குறைந்த பாடில்லை. நாள்தோறும் கூட்ட எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. இதில் பலர் வெளியூர்களிலிருந்தும் கிளம்பி வந்து கொண்டு இருக்கின்றனர்.
குடும்பம் குடும்பமாக, குழந்தை குட்டிகளுடன் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். மழை பெய்தாலும் கவலைப்படாமல் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில், அஞ்சலி செலுத்த மெரினா வரும் தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்குமே உணவு வழங்கப்படும் என சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் உள்ள தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தினந்தோறும் வரும் கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் காலை முதல் மாலை வரை உணவு வழங்க சேப்பாக்கம் தொகுதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. pic.twitter.com/4kn76pUcOM
— J Anbazhagan (@JAnbazhagan) August 11, 2018
காலை முதல் மாலை வரை அனைவருக்கும் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அன்பழகன் கூறியுள்ளார். இந்த தகவலை அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குடிநீர், வாட்டர் பாட்டில் என திமுக தரப்பில் வருகிற மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அஞ்சலி செலுத்த வருவோர் நிம்மதியாக அஞ்சலி செலுத்தி விட்டுச் செல்கின்றனர்.