பரமக்குடி மீன் மார்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.. 10 கிலோ தரமற்ற மீன்கள் பறிமுதல்!
10 கிலோ தரமற்ற மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
Recommended Video
ராமநாதபுரம்: பரமக்குடி மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 10 கிலோ தரமற்ற மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பரமக்குடி உழவர் சந்தை பகுதியில் சக்தி மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தரமற்ற மீன்கள் விற்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு கடந்த சில தினங்களாகவே அடிக்கடி தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.
புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று சக்தி மீன் மார்க்கெட்டுக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த திடீர் சோதனையினால் அதிர்ச்சியடைந்த மீன் வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் அதிகாரிகள் சோதனை நடத்தியதில், தரமில்லாத மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை தெரியவந்தது.
இதனையடுத்து, மீன்வியாபாரிகள் அனைவரும் லைசன்ஸ் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட அதிகாரிகள், தரமற்ற 10 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அவற்றினை அழித்தனர். மீன் உண்ணக்கூடிய உணவு வகையை சார்ந்தது என்பதால், அவைகளை ஐஸ் கட்டியில் பாதுகாக்க வேண்டும், என்றும், தரமில்லாத மீன்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
ஆய்வின் இறுதியில் ஜெயலலிதா மீன் வள பல்கலைக்கழக இணை இயக்குநர் முனைவர். சுகுமார் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மீன்களை பதப்படுத்துதல், தரமற்ற மீன்களை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.