கோமாரி நோய்க்கு பலியான 175 மாடுகள்: முதுமலை சரணாலயம் வழியாக கால்நடைகள் கொண்டு செல்ல தடை
மழைக் காலங்களில், மாடுகளை கோமாரி என்ற நோய் தாக்கும். இந்த நோய் தாக்கிய மாடுகளின் வாய் மற்றும் பாதங்களில் புண்கள் உருவாகும். சில நாட்களில் அவை இறந்துவிடும். விவசாயிகள் இந்த நோயை, மாடுகளுக்கு ஏற்படும் அம்மை நோய் என்று கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடலூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோமாரி நோய் தாக்குதலுக்கு மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் இம்மாவட்டத்தில் 175 மாடுகள் கோமாரி தாக்குதலுக்கு பலியாகி உள்ளன. நோயை கட்டுப்படுத்த, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கால்நடை மருத்துவர்கள்
ஒவ்வொரு கிராமத்திற்கும் கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று, நோய் தாக்குதல் குறித்து சோதனை நடத்தி, தேவையான சிகிச்சைகளை அளித்து வருவாக அத்துறை தெரிவித்துள்ளது.
கோமாரி நோய் பரவுவதை தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த 5 மாட்டு சந்தைகள் சமீபத்தில் மூடப்பட்டன.
தெருவில் வீசப்படும் மாடுகள்
கடலூர் மாவட்டத்தில் நோய் தாக்குதலுக்கு ஆளாகி இறந்து போன மாடுகளை புதைக்காமல் வீரணம் ஏரிக்கரை அருகே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. இறந்த மாடுகளை நாய்கள் சூழ்ந்து கொண்டுள்ளதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
முதுமலை சரணாலயம்
நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயப் பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கி வருவதாக கூறப்படுகிறது. எனவே சரணாலய விலங்குகளுக்கு நோய் தாக்குவதை தடுக்க அந்த சாலை வழியாக மாடுகள், கால்நடைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.