சூறைக்காற்றுடன் கன மழை... சிவகாசியில் மரம் விழுந்து பெண் பலி
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.
சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது, சிவகாசியில் சூறைக்காற்று வீசியதில் மரம் விழுந்து பெண் ஒருவர் பலியானார்.
அக்னி நட்சத்திரம் தொடங்கி 2 வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் அநாயசமாக சென்சுரியைத்தாண்டி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தலைநகர் சென்னை இன்று அதிகபட்ச வெயிலை கண்டது, சாலைகளில் தகித்த அனல் காற்றால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்கள் கோடை மழையால் குளிச்சியடைந்துள்ளன. திருச்சி மாநகர் முழுவதும் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் ஆரம்பூர், மேளப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திண்டுக்கல் நகர பகுதிகள் முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. கோடை வெய்யிலின் தாக்கத்துக்கு மத்தியில் மழைபெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகாசி அருகே உராம்பட்டியில் பலத்த மழையால் மரம் விழுந்து பெண் பலியாகியுள்ளார். காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். விருதுநகர் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருவதால் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தத போதும் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் வியாழக்கிழமை
நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பகல் 1.30 மணி முதல் 2.30 மணிவரையிலும் பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. மே மாதத்தில் வழக்கமான கோடை மழையை
விடவும் அதிக அளவில் பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம், குலசேகரம் , பேச்சிப்பாறை, களியக்காவிளை தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது. தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழை சென்னை மக்களை தவிர மற்றவர்களுக்கு கூல் சம்மராக உள்ளது என்றே சொல்லாம்.