அதிமுகவினரின் கந்தரகோல ஜல்லிக்கட்டு.. அமைச்சர் நல்ல பெயர் எடுக்க 2 பேரின் உயிர் பலி
இன்றே ஜல்லிக்கட்டை நடத்தி தமிழக அரசு நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று கருதி அதிமுகவினரால் அவசர கோலத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.
புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை நேற்று தமிழக அரசு பிறப்பித்தது. மறுநாளே ஜல்லிக்கட்டை நடத்தி நல்ல பெயரை மக்களிடமிருந்து வாங்கிவிட வேண்டும் என்று அமைச்சர்கள் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டிற்கு 2 உயிர்கள் இன்று பலியாகியுள்ளன.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களை சமாதானம் செய்யும் வகையில் நேற்று தமிழக அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. மேலும், அலங்காநல்லூரில் முதல்வர் ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் என்ற கிராமத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்னிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டுப் போட்டியை அவசர அவசரமாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இன்றி, மக்களிடம் இருந்து நல்ல பெயரை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதிமுகவினர் அவசர ஏற்பாட்டிற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததால் 2 மாடுபிடி இளைஞர்கள் மாடு முட்டி உயிரிழந்துள்ளனர். பொதுவாக, ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடங்களில் போதிய அளவில் மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் இருக்க வேண்டும்.
ஆனால், இந்த ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் அதிமுகவினரால் அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்டதால்தான் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 90 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள் என்றும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர், ஊர் மக்களை கட்டாயப்படுத்தி ஜல்லிக்கட்டு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. நாளை அமைச்சரவை கூட உள்ள நிலையில், ஏன் ஜல்லிக்கட்டை இன்றே நடத்த அமைச்சர்கள் அவசரம் காட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.