மாயமான டோர்னியர்…. விலகாத மர்மம்: சர்வதேச நாடுகள் உதவியுடன் தேடுதல் வேட்டை
சென்னை: 30 நாட்களாக தேடியும் டோர்னியர் விமானம் மாயமான மர்மம் விலகவில்லை. சர்வதேச தரம் வாய்ந்த தொழில்நுட்ப கருவிகளுடன் கடலுக்குள் சல்லடை போட்டு தேடியும் டோர்னியர் விமானத்தின் ஒரு இறக்கையைக் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளிடம் தேடுதல் வேட்டை குறித்து கலந்தாலோசனை செய்து வரும் இந்திய கடலோர காவல் படையினர் 12 ஏஜென்சிகளின் உதவியையும் நாடியுள்ளனர்.
இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் கடந்த ஜூன் 8ம் தேதி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ரோந்து சென்ற போது மாயமானது. இந்த விமானம் சிதம்பரம் நகரத்தின் கிழக்கே 16 கடல் மைல் தொலைவில் கடலில் விழுந்திருப்பது கண்டறியப்பட்டது.
கடந்த 1 மாத காலமாக விமானம் விழுந்ததாக கூறப்படும் பகுதியில் கப்பல் மற்றும் விமானம் மூலம் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். ஆனாலும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
அங்குள்ள சதுப்பு நில காடுகளில் விழுந்திருக்க வாய்ப்பு உள்ளதா என்றும் தேடியும் விமானம் குறித்தும் விமானத்தில் பயணித்தவர்கள் குறித்தும் எதுவும் தெரியவில்லை. இதனால் விமானத்தில் பயணித்த விமானிகளின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பிரதமருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமும், கடிதம் மூலமும் கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதனையடுத்து தேடுதல் வேட்டை மீண்டும் தீவிரமாகியுள்ளது.
30 நாட்களாக தேடுதல்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கடலோர காவல் படையின் தென்மண்டல ஜ.ஜி, எஸ்.பி.சர்மா, மாயமான விமானத்தை கடந்த 30 நாட்களாக இந்திய கடலோர பாதுகாப்புப்படை கப்பல்களும், இந்திய கப்பல் படையின் கப்பல்கள் மற்றும் விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
சிக்னல் கிடைப்பதில் சிக்கல்
நவீன தொலைத்தொடர்பு வசதிகள் கொண்ட ‘சாகர்நிதி' என்ற கப்பலில் இருந்து தொலை தொடர்பு கருவிகள் மூலம் ‘மாயமான விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல்கள் வருகிறதா? என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் சிக்னல்கள் விட்டு, விட்டு வந்ததால் நம்பகத்தன்மையான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆழ்கடலில் ஆய்வு
சாகர்நிதி கப்பலை திரும்ப பெற்றுவிட்டு ஒலிம்பிக் கேன்யான் கப்பலில் உள்ள ‘ரிமோட்லி ஆபரேட்டிங் வெசல்' என்ற நவீன கருவியில் உள்ள ‘எக்கோ சவுண்டர்' என்ற எதிரொலிக் கருவி, நீர்மூழ்கிக் கேமரா, ஒளி வெள்ள விளக்குகள், வீடியோ படப்பிடிப்புக் கருவிகள் மூலம் ஆழ்கடலில் இருண்ட பகுதிகளில் படங்கள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அதிர்வுகள் விட்டு விட்டு வருவதால் நம்பும்படியான எந்த தகவல்களும் முழுமையாக பெறமுடியவில்லை.
சர்வதேச நாடுகளுடன் ஆலோசனை
இந்தநிலையில் தற்போது ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகளிடம் தேடுதல் வேட்டை குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது. இதுதவிர 12 ஏஜென்சிகளின் உதவியும் பெறப்பட்டது. பல்வேறு சவால்களுக்கு இடையே ஒரு மாதமாகியும் தேடுதல் வேட்டை தொடர்கிறது.
புதிய கப்பல்
ரேடாரில், விமானம் கடலில் விழுந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால், விமானம் கடத்தப்பட்டதற்கான கேள்வி எழவில்லை. தமிழக அரசின் மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் உதவி வருகின்றனர். விமானத்தை தேடும் பணிக்காக மேலும் ஒரு கப்பல் காக்கிநாடாவில் இருந்து வெள்ளிக்கிழமை பகல் 2 மணி அளவில் சிதம்பரம் கடல் பகுதிக்கு வர உள்ளது.
விமானிகளின் குடும்பத்தினர்
மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானிகளின் குடும்பத்தினர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கப்படுகிறது. கருப்பு பெட்டி செயலிழந்த நிலையில், வெளிநாடுகளில் நடந்த விமான விபத்துக்களை கண்டறிந்த விஞ்ஞானி டி.ஜெயபிரபுவின் ‘‘சீஸ்மெட்டிக்'' என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று விமானிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞானி ஜெயபிரபுவிடம் பேசி அந்த முறையை பயன்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் சர்மா கூறியுள்ளார்.
விடை தெரிவது எப்போது
மாயமான விமானம் கடத்தப்பட்டதா? கடலுக்குள் விழுந்ததா? என்ற கேள்விகளில் ஏதாவது ஒரு கேள்விக்கு விடை தெரிந்தால் மட்டுமே விமானத்தில் பயணித்த விமானிகளின் குடும்பத்தினருக்கு நிம்மதி ஏற்படும். அதுவரை தேடுதல் வேட்டையை நடத்த முடிவு செய்துள்ளனர் இந்திய கடலோர காவல்படையினர்.