பசுமை நிறைந்த நீர் நிலைகள்.. பாடித் திரியும் "ஃபாரீன்" பறவைகள்... நெல்லையில்!
நெல்லை: நெல்லை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து பிரமாதமாக இருப்பதால் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள குளங்கள் நீர்வாழ் பறவைகளுக்கு ஏற்றதாக நிரம்பி வருகிறது. அதிலும் தாமிரபரணி பாசன கால்வாயில் தண்ணீர் வரும் காலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் மாதக்கணக்கில் வந்து முகாமிட்டு செல்லும்.
குறிப்பாக கூந்தன்குளம், வாகைகுளம் உள்ளிட்ட குளங்களில் வெளிநாட்டு பறவைகள் மாதக்கணக்கில் கூட முகாமிட்டு தங்கி செல்கின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்தாண்டு நடந்த கணக்கெடுப்பில் 54 ஆயிரம் பறவைகள் இருப்பது தெரிய வந்தது.
பறவைகள் சரணாலயம் எனப்படும் கூந்தன்குளத்தில் அதிக அளவில் பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது நெல்லை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த குளங்களில் வெளிநாட்டு பறவைகள் முகாமிட தொடங்கியுள்ளன.
ராஜவல்லிபுரம், பாலமடை குளங்களில் பிளமிங்கோ பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
மேலும் ராஜவல்லிபுரம் குளத்தில் கூழை கிடா, செந்நாரை, நாகமக்கோழி, அன்னப்பறவை, நீர்வாத்து உள்ளிட்ட பறவைகள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளன.
குஜராத் மாநிலத்தில் இரு்ந்து வரும் பூநாரை இனப்பறவைகளும் இக்குளங்களில் அதிக அளவில் கூடு கட்டத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நெல்லை கால்வாயில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் உள்நாடு மற்று்ம் வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்தக் கால்வாயில் கூடுதல் தண்ணீர் வந்தால் இன்னும் பறவைகள் அதிகமாக வரும் என தெரிவித்தனர்.