பசுமை நிறைந்த நினைவுகளுடன்.. பாடித் திரிந்து விட்டு பறந்தோடிய வேடந்தாங்கல் பறவைகளே!
சென்னை: சீசன் முடிந்த காரணத்தால் வேடந்தாங்கலுக்கு இனப்பெருக்கத்துக்காக வந்த பறவைகள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிட்டன. இதையடுத்து, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வரும் 27-ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதாக தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பழமையான சரணாலயங்களில் வேடந்தாங்கலும் ஒன்று. இது சென்னையில் இருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் உள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான மைல்களை தாண்டி வந்து, குறிப்பிட்ட காலம் வரை இருந்து, தனது வம்சத்தைப் பெருக்க, முட்டையிட்டு குஞ்சு பொரித்து, சீசனை அனுபவிக்க வந்த வெளிநாட்டு விருந்தாளிகளாய், பறவைகள் இங்கு வந்து செல்வதுண்டு.
வெளிநாட்டுப் பறவைகள்...
ஆண்டுதோறும் சிங்கப்பூர், வங்காளதேசம், மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்து வக்கா, நாரை, மஞ்சள் நாரை, முக்குளிப்பான், கிவி, நாமகோழி, சாம்பல் கூழைக்கடா, நத்திக்கொத்தி நாரை, கூழைகடா, பாம்புதாரா, ஊசிவால்வாத்து, கரண்டிவாயன், வெள்ளைநிற அரிவாள்மூக்கன், வர்ணநாரை, நீர்காகம் போன்ற பல்வகை பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து செல்கின்றன.
சீசன்...
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளுக்கான சீசன் தொடங்குவதுண்டு. வேடந்தாங்கல் ஏரியில் உள்ள கடம்ப, கருவேல மரங்களில், இப்பறவைகள் கூடு கட்டி, தங்கி செல்லும்.
ஜனவரி...
பின்னர் அவை ஏப்ரல், மே மாதங்களில் மீண்டும் தங்களது ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும். அதிகபட்ச அளவாக 40,000 முதல் 50,000 வரையிலான பறவைகளை ஜனவரி மாதத்தில் வேடந்தாங்கலில் காண முடியும்.
முடிந்தது சீசன்...
இந்நிலையில், தற்போது அங்கு சீசன் முடிந்த காரணத்தால் இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பறவைகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளன. இதையடுத்து, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வரும் 27-ஆம் தேதி முதல் மூடப்படுவதாக தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பராமரிப்பு பணிகள்...
இந்தாண்டிற்கான சீசன் மீண்டும் மழை பெய்த பின் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்கும். அதுவரை சரணாலயத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.